ஜெய் பீம் படம் 5 மொழிகளில் வெளியீடு.. ஹிந்தி மொழியை மட்டும் சூர்யா எதிர்ப்பதா? எச்.ராஜா கடும் கோபம்
சென்னை: ஜெய் பீம் திரைப்படத்தை 5 மொழிகளில் வெளியிட்டது தொடர்பாக தமிழ்நாடு பாஜக சீனியர் தலைவர் எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் அமேசான் ஆன்லைன் தளத்தில் வெளியாகி உள்ளது ஜெய் பீம் திரைப்படம்.
பழங்குடியின மக்கள் காவல்துறையினரால் வழக்குகளுக்கு உள்ளாக்கப்பட்டு கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட, உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

லாக் அப் சித்திரவதைகள்
அந்த கால கட்டங்களில் காவல்துறை எந்த அளவுக்கு லாக்கப்பில் வைத்து கடும் சித்திரவதைகளை கொடுத்தது என்பது பற்றிய காட்சிகள் நெஞ்சை உறைய வைப்பதாக இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் கூட சாத்தான்குளம் பகுதியில் காவல்துறையினரால் இரு வியாபாரிகள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 1990களின் ஆரம்ப காலகட்டத்தில் இதுபோன்ற சித்திரவதைகள் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை இப்போது உள்ள மக்களுக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் காட்சியமைப்பு சென்றுள்ளது. அதேநேரம் திரைக்கதையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் திரில்லர் திரைப்படம் போல பரபரப்பாக நகர்கிறது கதை.

மொழி திணிப்பு அறை
இதுபோன்ற காரணங்களால் ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. பழங்குடியினர் உரிமை பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாமல் மொழி திணிப்பு தொடர்பான காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன . உதாரணத்திற்கு போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் ஹிந்தி மொழியில் தன்னிடம் பேசும் வட இந்தியர் ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அறைவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. தமிழில் பேசு என்று பிரகாஷ்ராஜ் அதில் கூறுகிறார்.

வட இந்தியர்கள் விமர்சனம்
வட இந்தியர்கள் இந்த காட்சியை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவை விமர்சனம் செய்துள்ளார். நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம்.. இவ்வாறு எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து
இதற்கு பதில் அளிக்கும் நெட்டிசன்கள், இந்தியை திணிக்க கூடாது என்பதுதான் சூர்யா கருத்து. மற்றபடி ஹிந்தி படிக்கக் கூடாது என்ற அவர் கூறவில்லை. அறக்கட்டளை வைத்து சூர்யா கல்விக்கு உதவி செய்து வருகிறார். நீங்கள் அதுபோல ஏதாவது உதவி செய்துவிட்டு விமர்சனம் செய்யலாம், என்று பதில் கூறுகிறார்கள்.
Recommended Video

மாநில மொழிக்கு முக்கியத்துவம்
இந்தியை தமிழகத்தில் திணிக்கக் கூடாது என்று, திரைப்படம் வலியுறுத்துகிறது. ஹிந்தியில் டப் செய்யும்போது வட இந்தியரை அடிக்கும் காட்சியில் உண்மையை சொல் என்று பிரகாஷ்ராஜ் கூறுவது போல காட்சி டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இதை சில வட இந்திய ஆதரவு தமிழர்கள், விமர்சனம் செய்து வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் . ஆனால் அவரவர் மாநிலத்தில் அவரவர் மொழியை பேச வேண்டும் என்றுதான் அந்த காட்சி எடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, அதில் தவறு ஏதும் இல்லை என்று திரைப்படத்துக்கு ஆதரவாக தமிழ் ஆர்வலர்கள் கூறுவதைக் கவனிக்க முடிகிறது. இப்படியாக பல சர்ச்சைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில்தான், எச்.ராஜா தனது பங்குக்கு திரியை கொளுத்திப் போட்டிருக்கிறார். ஏற்கனவே மெர்சல் திரைப்படம் வெளிவந்தபோது நடிகர் விஜய்யை, ஜோசப் விஜய் என்று விமர்சனம் செய்தார் எச்.ராஜா என்பது நினைவிருக்கலாம்.

சூர்யா போட்ட லைக்
இதனிடையே தன்னை விமர்சனம் செய்து எச்.ராஜா போட்ட ட்விட்டர் பதிவுக்கு நடிகர் சூர்யா லைக் போட்டு இருக்கிறார். விமர்சனம் செய்தால் கூட நான் உங்களை விரும்புவேன் என்று மறைமுகமாக சூரியா தெரிவிக்கிறாரா அல்லது தனது திரைப்படத்திற்கு ராஜா இலவசமாக விளம்பரம் செய்து கொடுக்கிறார் என்ற அர்த்தத்தில் லைக் போட்டாரா என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் வாத விவாதங்கள் ஜரூராக நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications