ஏன் ரவுடிகள் எல்லாம் பாஜகவுக்கு வர்றாங்க தெரியுமா.. எல். முருகனின் பலே விளக்கம்!
பாஜகவில் அண்ணாமலை போல ஐபிஎஸ் ஆபிசர்களும் இணைகின்றனர். அதே நேரத்தில் ரவுடிகளும் தமிழக பாஜகவில் இணைகின்றனர். ரவுடிகள் பாஜகவில் இணைவது திருந்தி வாழ்வதற்காகவே என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் எல். முருகன்.
சென்னை: அரசியல் கட்சியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். இங்கே வந்த பிறகு எப்படி இருக்கிறார்கள் என்றுதான் பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் எல். முருகன். கல்வெட்டு ரவி பாஜகவில் இணைந்திருப்பதால் அவர் ரவுடியாகவே இருப்பார் என்று கூற முடியாது என்றும் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காகவே பாஜகவில் இணைவதாகவே கூறியுள்ளார் எல். முருகன்.
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் கடந்த மார்ச் மாதத்தில் பதவி ஏற்றார். அப்போதில் இருந்தே பல சினிமா பிரபலங்கள் இணைந்தனர். தற்போது குற்றவழக்குகளில் சிக்கி பலமுறை குண்டாஸ் வழக்கில் சிக்கியவர்களும் பாஜகவில் வில் இருந்து நீக்கப்பட்டவர்களும் கூட இணைந்து வருகின்றனர். அதேநேரத்தில் ஐஎஸ்எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் ஏராளமான கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி முரளி என்கிற முரளிதரனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கல்வெட்டு ரவி என்ற பிரபல ரவுடி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜகவில் இணையும் ரவுடிகள்
6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கல்வெட்டு ரவி மீது 6 படுகொலைகள் உள்ளிட்ட 35 வழக்குகள் உள்ளது. கல்வெட்டு ரவியுடன் சேர்ந்து சத்யா என்ற சத்தியராஜ் என்ற மற்றொரு ரவுடியும் பாஜகவில் இணைந்திருக்கிறார். ரவுடி சத்யா மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளது. 2 முறை குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமினில் வெளி வந்திருக்கிறார்.

கட்சி தலைவருக்கே தெரியது
பாஜகவில் ரவுடிகள் இணையும் பட்டியல் கூடிக்கொண்டே போவது அக்கட்சியினரிடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தான் கட்சியில் இணைவார்கள். ஆனால் இப்படி பல ரவுடிகள் பாஜகவில் இணைந்தது அந்த கட்சி தலைவருக்கே தெரியாமல் நடந்துள்ளது அதன்பிறகுதான் அந்த உறுப்பினரைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டிருக்கிறார்.

ரவுடிகளின் பின்னணி
ரவுடிகள் ஏன் பாஜகவில் இணைகிறார்கள் என்பது பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ள எல். முருகன், ரவுடிகளின் பின்னணி பற்றி விசாரித்தே கட்சியில் இணைப்பதாகவே கூறியுள்ளார். அவர்கள் திருந்தி வாழ விரும்புவதாகவும், கட்சியில் இணைந்த பிறகு அவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் எல்.முருகன்.

சட்டசபை தேர்தல் கூட்டணி
சட்டசபைத் தேர்தல், கூட்டணி பற்றியும் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் எல். முருகன், 2021 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் அமர்ந்திருப்பார்கள். இரட்டை இலக்கத்திலான எம்எல்ஏக்கள் அமர்ந்திருப்பார்கள் என்று கூறியுள்ளார் எல்.முருகன். தேசிய ஜனநாயகக் கூட்டணி இப்போது இருக்கிறது. அந்த கூட்டணி தொடரும் என்றும் கூறியுள்ளார் எல். முருகன்.












Click it and Unblock the Notifications