குறுக்கே வந்த தமிழிசை.. விஜய் வெளிச்சம் போட்டு காட்டிட்டாராம்! திருமாவளவன் மீதும் அட்டாக்!
சென்னை: “திமுகவின் கொள்கை மக்களை ஏமாற்றுவது.. அதற்கு ஒத்துப் போவதும் ஒத்து ஊதுவதும் திருமாவளவன் போன்றவர்களின் வேலை” என கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
தவெக தலைவர் விஜய் திமுக அரசை இன்று நேரடியாக விமர்சித்தது அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் கருத்துக்கு திமுக கூட்டணி தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், விஜய்க்கு சப்போர்ட்டாக களமிறங்கி, திமுக கூட்டணியை காட்டமாக விமர்சித்து உள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழிசை சௌந்தரராஜன் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “நீட் தேர்வு பற்றி தெளிவான கருத்தை பாஜக கூறி வருகிறது. இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் திமுகவின் பொய் பிரச்சாரத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். உடனே அண்ணன் திருமாவளவன் தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் சொன்னதையே சொல்லி அதாவது மாநில அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறார்.
நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்துதான் முதல் கையெழுத்து என்று உங்கள் கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் ஏன் சொன்னார்? அப்படியென்றால் முடியாது என்று தெரிந்தும் மக்களை ஏமாற்றத்தானே பொய் வாக்குறுதி தந்தீர்கள்.
நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஏன் கையெழுத்து வாங்கி மாணவர்களை
ஏமாற்றினீர்கள்? திருமாவளவன் சொல்வதைப் போல நீட் தேர்வு பற்றி முடிவு செய்வது மத்திய அரசு அல்ல.. அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
அப்படியென்றால் பொய் வாக்குறுதி பேசுவதும் தெரிந்தும் மாற்றிப் பேசுவதும் இப்போது சொல்லலாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழக மக்களை ஏமாற்றுவதும் இவர்களது வாடிக்கையாக இருக்கிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
1967 - இல் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று சொன்ன காலத்திலும் சரி....
பொங்கல் பரிசு தருவோம் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும் சரி... திமுகவின் கொள்கை மக்களை ஏமாற்றுவது.. கூட்டணி கட்சிகள் அதற்கு ஒத்துப் போவதும் ஒத்து ஊதுவதும் திருமாவளவன் போன்றவர்களின் வேலை... இவர்களை 2026-இல் மக்கள் ஒத்திப்போங்கள் என்று ஓரம் கட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன.
தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது. கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள்.
ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
தவெக தலைவர் விஜய்யின் இந்தப் பதிவு குறித்து விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன், "நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. நீட் தேர்வு ரத்து முயற்சியில் திமுக தன் கடமையை செய்துள்ளது. நீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது மத்திய அரசு தான் என்பதை தவெக தலைவர் விஜய் உணர்ந்துள்ளாரா எனத் தெரியவில்லை. மத்திய அரசை கேள்வி கேட்பதுதான் முறை" எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications