நீங்க இல்லாமயா.. அய்யோ அப்படி ஒரு கூட்டணியே வேண்டாம்.. அண்ணாமலையை ‘கூல்’ செய்த நிர்வாகிகள்!
உங்களை விட்டுவிட்டு ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதை பாஜக தொண்டர்கள் விரும்பமாட்டார்கள் என அண்ணாமலையை நிர்வாகிகள் சமாதானம் செய்துள்ளனர்.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சால் அதிர்ச்சியடைந்த பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், அவரை சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றால் நான் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன் என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியிருப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.
அண்ணாமலை இப்படி பேசியது நிர்வாகிகள் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. உடனடியாக அண்ணாமலையை சமாதானம் செய்துள்ளனர்.

பாஜக தலைமையின் திட்டம்
அதிமுக - பாஜக இடையே மோதல் உச்ச கட்டத்திற்கு சென்ற நிலையில் இரு கட்சியில் இருந்தும் சீனியர்கள் சிலர் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவும், அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களை வெல்ல விரும்பும் பாஜக தலைமையும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே சரியானது என்று கருதுகிறது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்ட பெரிய கூட்டணியை அமைப்பதே திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கான வியூகம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது.

அண்ணாமலை எதிர்ப்பு
ஆனால், சமீபத்திய மோதல்களின் காரணமாக அதிமுகவுடனான கூட்டணியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விரும்பவில்லை என்பது அவரது பேச்சின் மூலமே வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வேன், பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக கட்சிப் பணிகளை தொடர்வேன் என்று அண்ணாமலை பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

அண்ணாமலை பேச்சால் பரபரப்பு
சமரசங்களை செய்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். கூட்டணியில் சமரசங்களை செய்ய சொல்கிறார்கள். சமரசம் செய்து கூட்டணியை ஏற்படுத்தி அதன் வழியில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அண்ணாமலை தேவையில்லை அப்படி ஒரு சமரசமும் தேவையில்லை. கூட்டணிக்காக சமரசங்கள் செய்து கட்சியை கட்டமைத்து செல்ல இங்கே நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கட்சியை வழிநடத்தலாம். அதிமுகவுடன் கூட்டணி என்றால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று பேசினார்.

நிர்வாகிகள் சமாதானம்
இதனால் அங்கு கூடியிருந்த பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அண்ணாமலையின் ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகள் பேசும்போது அண்ணாமலையை சமாதானப்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பேசும்போது, வழக்கமாக அண்ணாமலை இப்படி பேசமாட்டார். குள்ள நரிகள் ஓலமிடுவதற்காக சிங்கங்கள் பதுங்கக்கூடாது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட போது அவரை ஓரங்கட்ட போகிறார்கள் என்று சிலர் கூறினார்கள். ஆனால் அதெல்லாம் நடக்காது என்றோம்.

பாஜக தொண்டனுக்கு தேவையில்லை
நீங்கள் வெறும் தலைவர் இல்லை. விரும்பும் அடையாளம். அதனால் முடிவு எதுவானாலும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். உங்களை விடுவித்து விட்டு ஒரு கட்சியுடன் கூட்டணி என்றால் அந்த சமரசம் பாஜகவுக்கும் தொண்டனுக்கும் தேவையே இல்லை என்று தெரிவித்தாராம். இதற்கு நன்றி தெரிவித்து மீண்டும் பேசிய அண்ணாமலை, அண்ணாமலை ஒருநாளும் தன் நிலையில் இருந்து தாழ்ந்து போக மாட்டான். மே 10ஆம் தேதிக்குப் பின்னர் என்ன சூழல் என்பதை பார்த்துவிட்டு அதற்கு ஏற்ப நம்முடைய செயல்பாடுகளை திட்டமிட்டுக்கொள்வோம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications