'ஏன் அப்படி ஒரு சந்தேகம்'.. 'கொங்குநாடு' கேள்விக்கு எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் 'காட்டமான' பதில்
"நம்ம ஊரு பக்கத்தில் வல்லநாடு இருக்கிறது. தேனி பக்கத்தில் வருஷநாடு இருக்கிறது, மணப்பாறை அருகே வளநாடு இருக்கிறது.. அதெல்லாம் மாநிலமாக பிரிக்கலாமா?" எதற்கு அவங்களுக்கு பயம், பயமே தேவையில்லை எல்லாம் தமிழ்நாடு தான் என்று பாஜக எம்எல்ஏநயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Recommended Video
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதுபற்றி மத்திய அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மாநில அரசும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதேநேரம் கொங்குநாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில செயலாளர் கரு.நாகராஜன் கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான பரிசீலனை மத்திய அரசிடம் தொடக்க நிலையில் உள்ளது என்று கூறினார். அந்த பகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றும் கூறினார்.

விதைபோடவில்லை
இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், கொங்குநாட்டுக்கு ஒரு விதையும் போடவே இல்லை, கொங்குநாடு தமிழ்நாட்டில் தான் உள்ளது என்றார். சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.

வருசநாடு
பின்னர் நயினார் நாகேந்திரனிடம் 'கொங்குநாடு' விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நயினார், "நம்ம ஊரு பக்கத்தில் வல்லநாடு இருக்கிறது. தேனி பக்கத்தில் வருஷநாடு இருக்கிறது, மணப்பாறை அருகே வளநாடு இருக்கிறது.. அதெல்லாம் மாநிலமாக பிரிக்கலாமா? எதற்கு அவங்களுக்கு பயம். பயமே தேவையில்லை. எல்லாமே தமிழ்நாடு தான்.

அரசின் கடமை
ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆந்திரா இரண்டாக பிரிந்து உள்ளது. , உத்தரப் பிரதேசம் இரண்டாக பிரிந்து உள்ளது. மாநிலங்களை இரண்டாக பிரிப்பது மாநில மக்களின் எதிர்பார்ப்பையும், நோக்கத்தையும் உணர்த்துகிறது. மாநில மக்களுடைய எதிர்பார்ப்பு அவ்வாறாக இருக்கும் என்றால் அதை செய்ய வேண்டியது அரசின் கடமை என்றார்.

குறுகிய கண்ணோட்டம்
அப்போது செய்தியாளர்கள் கொங்கு நாட்டுக்கான விதை போடப்பட்டு உள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கு பதில் கூறிய நயினார் நாகேந்திரன், "ஏன் அப்படி ஒரு சந்தேகம். அப்படி எந்த ஒரு விதையும் போடவே இல்லை. கொங்குநாடு தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. அது உங்களுக்கு தெரியும் ஏற்கனவே இங்கு ஒன்றிய அரசு என தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே குறுகிய கண்ணோட்டத்தோடு போய்க்கொண்டிருக்கிறது" என்று காட்டமான பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications