ஓராண்டு திமுக ஆட்சியில்.. "இந்த 4 அமைச்சர்கள்" செயல்பாடு சூப்பர்.. சொல்வது பாஜக வானதி சீனிவாசன்!
சென்னை: தமிழக அமைச்சரவை பொறுப்பேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், டாப் 5 அமைச்சர்கள் யார் என்பது பற்றி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பில் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அமைச்சர்களுக்கு மதிப்பெண் அளிக்க விரும்பவில்லை எனக் கூறியதுடன், சட்டசபையில் கேட்கப்படும் கேள்விகளை உள்வாங்கி பதிலளிக்க கூடிய அமைச்சர்கள் என்றால் நான்கு பேரை கூறலாம் என்றார்.
சரி கூறுங்கள் என்றோம், அதன் விவரம் வருமாறு;
டாப் அமைச்சர்கள்
" திமுக அமைச்சரவை பொறுப்பேற்று நாளையுடன் ஓராண்டு முடிவடைகிறது. இந்தச் சூழலில் அமைச்சர்களின் கடந்த ஓராண்டு கால செயல்பாடுகள் என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை அமைச்சர்களுக்கு மதிப்பெண் அளிக்க விரும்பவில்லை. ஆனால் அதே வேளையில், எந்தெந்த அமைச்சர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள், மந்தமாக செயல்படுகிறார்கள் என்பதை திரும்பி பார்க்க வேண்டிய தருணம் இது. அந்த வகையில் என்னைக் கேட்டால் இந்த 4 அமைச்சர்கள் ஓரளவு பொறுப்புணர்ந்து தங்கள் பணிகளை செய்கிறார்கள் என்று கூறுவேன்."
யார் யார்?
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொறுப்புடன் செயல்படுகிறார். சட்டசபையிலும் சரி பொதுவெளியிலும் சரி ஓரளவு அரசு மீதான குற்றச்சாட்டுகளை, புகார்களை, பேரவையில் எதிர்க்கட்சியின முன் வைக்கும் கேள்விகளை உள்வாங்கி அதற்கு விளக்கத்துடன் பதில் அளிக்கிறார். இதனால் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் செயல்பாடுகள் பேசக்கூடிய வகையில் உள்ளது. இதேபோல் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமியும் தாம் வகிக்கும் அமைச்சர் பதவிக்கு ஏற்றவாறு பொறுப்புடன் செயல்படுகிறார். தேவையற்ற சர்ச்சைகளில் அவர் சிக்குவதில்லை. தான் உண்டு தம் துறை ரீதியிலான பணிகள் உண்டு என்று இருக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளை, கேள்விகளை புறம் தள்ளாமல் அதற்கு செவிமடுத்து உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்."
இந்துசமய அறநிலையத்துறை
"இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் நாம் என்ன சொல்ல வருகிறோம், என்ன கோரிக்கைகள், என்ன புகார்கள் உள்ளது என்பதை கவனமாக செவிமடுத்து முழுமையாக உள்வாங்கி அதற்குரிய பதில்களை அளித்து வருகிறார். இதனால் அமைச்சர் சேகர்பாபுவும் இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கிறார். மற்ற அமைச்சர்களும் குறிப்பாக மூத்த அமைச்சர்கள் எல்லோரும் பொறுப்புடன் தான் செயல்படுகிறார்கள். ஆனால் ஆட்சி அமைத்த போது அமைச்சர்கள் முழுமையாக முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். கடந்த மூன்று மாதங்களாக அது போல் ஒரு நிலை இல்லை, அமைச்சர்கள் இஷ்டத்திற்கு ஆடுகிறார்கள் என்ற சூழல் உருவாகியிருப்பதாக அறிகிறேன்."
நாகரீகமாக பேசுவார்கள்
மேற்சொன்ன அமைச்சர்கள் எல்லாம் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் நாகரீகமாக பேசக்கூடியவர்கள். தேவையின்றி எதிர்க்கட்சிகளை சட்டசபையில் வம்பு இழுத்து குற்றஞ்சாட்டாமல் தாங்கள் வகிக்கும் பொறுப்பை உணர்ந்து தன்னடக்கத்துடன் இருக்கக் கூடியவர்கள். ஒரு சில அமைச்சர்கள் எதிர்க்கட்சிகளை குற்றஞ்சுமத்தி வம்பு இழுத்து அதன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்கள். அவர்களை பற்றியெல்லாம் சொல்ல விரும்பவில்லை." இவ்வாறு ஓராண்டு கால திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி வானதி சீனிவாசன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.