விஜய்யால் மிக பெரிய சிக்கல்.. இந்த வருஷம் பட்ஜெட் அவ்வளவு தானா? அமைச்சர்கள் இல்லாத ’டாப்’ இலாகாக்கள்!
சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், முழுமையான அமைச்சரவை இன்னும் உருவாக்கப்படாதது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக வேளாண்மை, வருவாய், பால் வளம், மீன் வளம், 22 முக்கிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படாததால், 2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் கடும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். ஆனால் மாநில நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றும் பல துறைகள் இன்னும் அமைச்சர் இல்லாமலேயே செயல்பட்டு வருகின்றன.

பொதுவாக புதிய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களுக்குள் முழுமையான அமைச்சரவை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன்பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, அடுத்த நிதியாண்டுக்கான திட்டங்கள், புதிய அறிவிப்புகள் மற்றும் நிதி தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
விஜய் அரசு
ஆனால் தற்போதைய சூழலில் அது நடைபெறாததால் தலைமைச் செயலக அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, சமூகநலம், தொழிலாளர் நலன், போக்குவரத்து, சுற்றுலா, உயர் கல்வி, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால் வளம், குறு மற்றும் சிறு தொழில்கள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்கு அமைச்சர் இல்லாத நிலை நீடிக்கிறது. இந்த துறைகளின் செயலர்கள் பட்ஜெட் தொடர்பான கோப்புகளை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பட்ஜெட்
ஏற்கனவே இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், முழுமையான பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. காரணம், புதிய நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள், நிலுவையில் உள்ள திட்டங்கள் ஆகியவற்றுக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு துறையும் தங்களது தேவைகளை நிதித்துறைக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அமைச்சர்கள் இல்லாததால் அந்த நடைமுறை தாமதமாகி வருகிறது.
வேளாண்மை துறை
முக்கியமாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் குறித்து விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குறுவை சாகுபடிக்கான மானியங்கள், விதை உதவித் திட்டங்கள், பாசன வசதிகள் போன்ற அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும். ஆனால் அமைச்சரே இல்லாததால் அதிகாரிகள் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல்
இதுபோல சமூகநலத் துறையில் பெண்கள் நலத் திட்டங்கள், உயர்கல்வித் துறையில் மாணவர் உதவித்தொகை திட்டங்கள், தொழிலாளர் நலத் துறையில் புதிய நல அறிவிப்புகள் ஆகியவை அனைத்தும் தற்போது நிலுவையில் உள்ளன. பட்ஜெட் தாக்கல் மேலும் தாமதமானால், இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வருவதிலும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் அதிகாரிகள் மத்தியில் உள்ளது.
அமைச்சரவை விரிவாக்கம்
இதற்கிடையில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வருகிறது. அந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாததால் அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்
மறுபுறம், முதலமைச்சர் விஜய் தற்போது ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் தங்களது துறைகளுக்கான ஆய்வுகளை உடனடியாக தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் அனைத்து துறைகளும் ஒரே நேரத்தில் செயல்பட வேண்டிய சூழலில், முழுமையான அமைச்சரவை இல்லாதது நிர்வாகத்தில் சிக்கலை உருவாக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறுமா? அல்லது மேலும் காலதாமதமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications