ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம்! பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த உரையை வாசிக்க ஆரம்பித்ததுமே ஆளுநர் ஆர்.என்.ரவி , உரையின் முன்பும் பின்பும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது.

ஆளுநர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் என்னால் ஏற்க முடியாத நிறைய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இதை நான் வாசித்தால் அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயலாகும் என கூறி அரசு எழுதி கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர் ரவி.
இதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். அப்போது சபாநாயகர் , ஆளுநருக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்த போது அவையிலிருந்து ஆளுநர் ரவி உடனடியாக வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தமிழக சட்டசபையின் 2ஆவது நாள் அமர்வு நேற்று நடந்தது. அதில் முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்எல்ஏக்கள் விவாதம் தொடங்கியது.
பின்னர் சட்டசபை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை ஆதரித்து உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஒரே தேர்தல் என்பது லோக்சபாவிற்கும் மாநிலங்களில் உள்ள சட்டசபைக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான். அப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலானால் வாக்காளர்கள் ஒரே நேரத்தில் எம்பி தேர்தலுக்கும் எம்எல்ஏ தேர்தலுக்கும் என 2 வாக்குகளை செலுத்த வேண்டும். இப்படி இரு தேர்தல்களை ஒன்றாக நடத்தினால் தேர்தல் செலவு குறையும் என்பது மத்திய அரசின் வாதம்.
கடந்த 1967 ஆம் ஆண்டு லோக்சபாவிற்கும் சட்டசபைக்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு 1968, 1969 ஆம் ஆண்டுகளில் சில மாநிலங்களின் சட்டசபைகள் கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டசபைக்கும் மக்களவைக்கும் தேர்தல்கள் தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றது முதல் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது போல் 2026ஆம் ஆண்டுக்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற தீர்மானமும் இன்று நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications