இந்து கடவுள்களை சாத்தான்கள் என விமர்சித்த போதெல்லாம் எங்கே போயிருந்தீங்க? கொந்தளித்த பாஜக நாராயணன்!
சென்னை: இந்து கடவுள்களை சாத்தான் என்று வர்ணிப்பது நாகரீகமானதா? அருவருப்பானது இல்லையா? அப்போதெல்லாம் எங்கே போயிருந்தீர்கள் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ஜவாஹிருல்லாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூரில் நடக்கும் கலவரத்தைக் கண்டித்து, ஜூலை 30ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், "இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தேவனின் பிள்ளைகள் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது.

சும்மா தேவாலயத்திற்கு போய் 'தேவனே வாரீர்.. வாரீர்' எனப் பாடிவிட்டு, எவனிடமோ நாட்டை கொடுத்துவிட்டார்கள். இந்த நாட்டில் நடந்த அநீதிக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான். மணிப்பூர் விவகாரத்தை நாம் பேசுவதால், நமக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை. இங்குள்ள கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடப் போவதில்லை." எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, "கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று சீமான் வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி சாத்தானுடைய அரங்கு கிடையாது. ஏன் தமிழ்நாட்டை குறிவைத்து சாத்தான் ஸ்டாக் பண்ணியிருக்கிறான்" என்று தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை சாத்தானுடைய அரங்கு என்றும் ஹிந்து கடவுள்களை சாத்தான் என்றும் மோகன் சி லாசரஸ் குறிப்பிட்ட போது இதே ஜவாஹிருல்லா எங்கு போயிருந்தார்?
தொடர்ந்து ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று பல்வேறு இஸ்லாமிய பேச்சாளர்கள் பேசும் போதேல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார் ஜவாஹிருல்லா? ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று வர்ணிப்பது நாகரீகமானதா? அருவருப்பானது இல்லையா? ஹிந்து கடவுள்களை விமர்சித்த போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு இப்போது கண்டிப்பது தானே நியாயமற்ற, நேர்மையற்ற செயலாகும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications