மகாபாரதம் ரெஃபரென்ஸ்.. பாஜக சொல்லும் நியாயத்தை ஏற்க மறுக்கலாமா? முதல்வர் ஸ்டாலினை சீண்டிய நாராயணன்!
முதல்வர் ஸ்டாலினின் ஆன்லைன் சூதாட்டம் பற்றிய விமர்சனத்துக்கு பாஜக நாராயணன் எதிர்வினை ஆற்றியுள்ளார்.
சென்னை : மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மறுக்கிறார்களா? என முதலமைச்சர் ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடையில் பேசிய நிலையில், "மகாபாரதத்தை முழுமையாகக் கற்றறியுங்கள். நெறி தவறி, நீதிக்குப் புறம்பாக, தன் மக்களின் நலனுக்காக, நாட்டு நலனை உதாசீனப்படுத்திய திருதராஷ்டிரன் குறித்து அறிந்து கொள்ளுங்கள். திருத்திக் கொள்ளுங்கள்." என பாஜக நாராயணன் தெரிவித்துள்ளார்.
மகாபாரதம் படியுங்கள், தெளிவு பெறுங்கள் ஸ்டாலின் அவர்களே என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காத நிலையில், அதைச் சாடிப் பேசியிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

மகாபாரதம் ரெஃபரென்ஸ்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் 1ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. மல்லிகார்ஜுன கார்கே, ஃபரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய அரசியல் தலைவர்கள் பங்குபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மேலும், மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மறுக்கிறார்களா? என்றும் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், ஸ்டாலினின் கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை விடுத்துள்ளார்.

பாஜக நாராயணன் பதில்
இதுகுறித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால்தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மறுக்கிறீர்களா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். அதைத்தான் நாங்களும் கேட்கிறோம் ஸ்டாலின் அவர்களே.. மகாபாரதத்தில் கவுரவ ராஜ்ஜியத்தில், பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்ற வாய்ப்பிருந்தும், கடமையை நிறைவேற்றத் தவறிய திருதராஷ்டிரன் இருப்பதால் தான் திமுக அரசில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இருந்தும் தடை செய்ய மறுத்தீர்களா?

தட்டிக்கேட்க மறுக்கிறீர்களா?
மகாபாரதத்தில் தவறு என்று தெரிந்தும், புத்திர பாசத்தால் துரியோதனன் செய்த அநியாயங்களை, முறைகேடுகளை அனுமதித்த திருதராஷ்டிரன் இருப்பதால் தான் உங்கள் அரசில் நடைபெறும் தவறுகளை, முறைகேடுகளை தட்டி கேட்க மறுக்கிறீர்களா? மகாபாரதத்தில் விதுரன் கூறிய நியாயத்தை, நீதியை ஏற்க மறுத்து உதாசீனப்படுத்திய திருதராஷ்டிரன் இருப்பதால்தான் தமிழ்நாடு பாஜக சுட்டிக்காட்டும் நியாயத்தை, நீதியை ஏற்க மறுக்கிறீர்களா?

முழுமையாக படியுங்கள்
ஸ்டாலின் அவர்களே, மகாபாரதத்தை முழுமையாகக் கற்றறியுங்கள். நெறி தவறி, நீதிக்குப் புறம்பாக, தன் மக்களின் நலனுக்காக, நாட்டு நலனை உதாசீனப்படுத்திய திருதராஷ்டிரன் குறித்து அறிந்து கொள்ளுங்கள். திருத்திக் கொள்ளுங்கள். இராமாயணம் ஒருவர் 'எப்படி இருக்க வேண்டும்' என்று போதிக்கிறது. மகாபாரதம் 'ஒருவர் எப்படி இருக்கக் கூடாது' என்று போதிக்கிறது. மகாபாரதத்தை முழுமையாக படியுங்கள், தெளிவு பெறுங்கள் ஸ்டாலின் அவர்களே." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications