நாங்குநேரியை ஆர்.எஸ்.எஸ் தத்தெடுக்கும்.. உண்மையான சமத்துவபுரத்தை படைப்போம் - பாஜக நாராயணன் பரபர!
சென்னை: அரசியல்வாதிகள் அனைவரும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ் பேரியக்கம் நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட கிராமத்தை தத்தெடுத்து கொள்ளட்டும், மிக விரைவில் உண்மையான சமத்துவபுரத்தை நாங்குநேரியில் படைப்போம் என பாஜக மாநிலத் துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், மாணவர்கள் வீடு புகுந்து சக மாணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாதி வெறியால் மாணவர்கள் நடத்திய இந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுதொடர்பாகப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் போன்ற சங் பரிவார் அமைப்புகள் மாணவர்கள் மத்தியில் சாதி ரீதியான, மத ரீதியான மோதலை திணிக்கின்றன என விமர்சித்தார்.

மேலும், நெல்லையில் சாதி வெறி கொண்ட மாணவர்களால் வெட்டப்பட்ட சின்னதுரை குடும்பத்தினரை நேரில் சந்தித்த திருமாவளவன், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, சாதி வெறி சூழலுக்கு மத்தியில் வாழ அச்சப்படும் அவர்களுக்கு, வேறு பகுதியில் அரசு வீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்வினை ஆற்றியுள்ளார்.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரின் தங்கை பயந்து பயந்து தான் வாழணுமா? இது எப்படி நியாயமாகும்? அந்த குடும்பத்தினருக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். அங்கே அவர்களால் குடியிருக்க முடியாது என்று அச்சப்படுகிறார்கள். தனியே வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கும், வேறு ஒரு இடத்தில் குடி பெயர்வதற்கு ஏற்ற வகையில் அரசு சார்பில் வழங்க முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
வேறு ஒரு பள்ளியில் ஏன் சேர்க்க வேண்டும்? வேறு ஒரு இடத்தில் ஏன் குடிபெயர வேண்டும்? உண்மையிலேயே சமூக நீதி காக்கும் அரசாக இருந்தால், திராவிட மாடல் அரசு என்று மார்தட்டிக் கொள்ளும் அரசாக இருந்தால், அதே பள்ளியில் படித்து, அதே இடத்தில் வாழ்ந்து ஜாதிய கொடுமைகளை ஒழிக்கும் சீர்திருத்தத்தை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றல்லவா தொல்.திருமாவளவன் அவர்கள் வலியுறுத்தியிருக்க வேண்டும்?
அதை விடுத்து, வேறு இடத்தில், வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது சமூக அநீதியல்லவா? சமத்துவத்திற்கு எதிரானது அல்லவா? மலிவான அரசியல் அல்லவா? சமூக நீதியை விட பதவியும், அதிகாரமும், அரசியலும் பெரிதாகி விட்டது என்பதை உணர்த்தி விட்டீர்களே? ஐயோ பாவம் உங்களை நம்பி உங்கள் பின்னால் வந்தவர்கள்!
அரசியல்வாதிகள் அனைவரும் ஒதுங்கி கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ் பேரியக்கம் அந்த கிராமத்தை தத்தெடுத்துக் கொள்ளட்டும். மிக விரைவில் உண்மையான சமத்துவபுரத்தை நாங்குநேரியில் படைப்போம்! ஆனால், அதை எதிர்ப்பீர்கள். ஏனெனில், அமைதி திரும்ப விரும்ப மாட்டீர்கள்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications