பேசுற வார்த்தையை பார்த்தீங்களா? ஆர்.எஸ்.பாரதியை கைது பண்ணுங்க.. ஆவேசமாக வந்த பாஜக நாராயணன்!
ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு எதிராக கொந்தளித்துள்ளார் நாராயணன் திருப்பதி.
சென்னை : பாஜகவினர் உயிரோடு இருக்க முடியாது என்று பேசியுள்ள திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய உத்தரவிட வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சாடிப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது என்று பேசினார்.
இதனைக் குறிப்பிட்டுக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக நாராயணன், ஆளும் கட்சி என்ற ஆணவத்தில், திமிரில் இதுபோன்று வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியில் ஆர்எஸ்.பாரதி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி பேச்சு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றுப் பேசுகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி சீண்டிப் பார்க்கிறார். இதை எடுத்துச் சொன்னால் மிரட்டும் பாணியில் அண்ணாமலை போன்றோர் பேசுகின்றனர். ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாக அண்ணாமலை கூறுகிறார். மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று, அண்ணாமலை காவல்துறையில் பணியாற்றிய போது புரிந்த ஊழல் பட்டியலை நான் வெளியிடுவேன்.

இருக்க முடியாது
நான் அரசியலுக்கு வந்தபோது, அண்ணாமலையின் தந்தை கூட பிறந்திருக்கமாட்டார். ஆனால் இப்போது அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டியுள்ளது. அண்ணாலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று தெரியவில்லை. இவருக்கு எப்படி ஐ.பி.எஸ் பதவி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அண்ணாமலை சொல்வதில் ஒன்று கூட உண்மையில்லை. நாங்கள் இந்திரா காந்தியை பார்த்தவர்கள், மிசாவை சந்தித்தவர்கள், சர்காரியா கமிஷனை தவிடு பொடியாக்கிய கட்சி என்பதனை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும். பாஜகவினர் இருக்க முடியாது" என்று பேசினார்.

கொலை மிரட்டல் - பாஜக கண்டனம்
இந்நிலையில், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தூத்துக்குடியில் பேசியிருக்கிறார். சட்ட மன்றத்தில் கொலை நடந்தாலும் வழக்கு தொடுக்க முடியாது என்று ஆளுநரை கொலை செய்வோம் என்று மிரட்டியதற்கு மௌனம் காத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது பாஜகவினரை கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ள ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.

கைது செய்ய வேண்டும்
ஆளும் கட்சி என்ற ஆணவத்தில், திமிரில் இதுபோன்று வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியில் ஆர்எஸ்.பாரதி பேசிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதோடு, இதே போன்று கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதை முதலமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது, அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியாத காரணத்தினால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்க ஆளும் திமுகவே முயற்சி செய்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது." எனச் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications