தலைக்கு மேல் தேர்தல் வேலை! ஆட்டம் காணும் அண்ணாமலையின் மெகா திட்டம்! என்ன பின்னணி?
ஏப்.14 முதல் அண்ணாமலை மேற்கொள்ளவிருந்த நடைபயணம் கேள்விக்குறி
சென்னை: தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் தடம் பதிக்கும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து அண்ணாமலை நடைபயணம் தொடங்கவிருந்த நிலையில், அவருக்கு தேர்தல் இணை பொறுப்பாளர் பதவி வழங்கி கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது பாஜக தேசியத் தலைமை.
ஏப்ரல், மே மாதங்களில் கர்நாடக மாநில தேர்தல் பணிகள் தலைக்கு மேல் இருக்கும் என்பதால் அண்ணாமலை தமிழ்நாட்டில் தாம் மேற்கொள்ளவிருந்த நடைபயணத்தை ஒத்தி வைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது அவர் மேற்கொண்ட 'வேல் யாத்திரை' இன்றளவும் பேசக்கூடிய வகையில் அப்போது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை திட்டம்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அது தொடர்பான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் அண்ணாமலை, வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டிருந்தார். இந்த நடைபயணமானது தனது அரசியல் பயணத்திற்கும், எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய பூஸ்ட் அப்பாக இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் கணக்கு போட்டிருந்தார் அண்ணாமலை.
நடைபயணம் ரத்து?
இந்தச் சூழலில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு கட்சியின் தேசியத் தலைமையால் கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் அண்ணாமலை. இதன் மூலம் இவர் தமிழ்நாட்டில் மேற்கொள்ளவிருந்த நடைபயணத்திற்கு சூசகமாக தடை போட்டுள்ளது பாஜக தேசியத் தலைமை. இதனிடையே பாத யாத்திரை மூலம் கட்சியில் மிகப் பெரிய ஸ்கோர் செய்துவிடலாம் என்ற அண்ணாமலையின் வியூகம் கேள்விக் குறியாகியுள்ளது.
ஒத்தி வைக்க வாய்ப்பு
குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கர்நாடகாவில் தேர்தல் பணிகள் தலைக்கு மேல் இருக்கும் என்பதால் அண்ணாமலை தமிழ்நாட்டில் தாம் மேற்கொள்ளவிருந்த நடைபயணத்தை ஒத்தி வைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே அவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் அந்த பயண திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில் அது நடைபயணமாக இல்லாமல் மக்கள் சந்திப்பு பிரச்சார வாகன பயணமாக மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது.
வேல் யாத்திரை
எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது அவர் மேற்கொண்ட 'வேல் யாத்திரை' இன்றளவும் பேசக்கூடிய வகையில் அப்போது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்கவும் அந்த யாத்திரை அடித்தளம் அமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.