திமுக அரசைக் கண்டித்து பாஜக உண்ணாவிரதம்.. மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு
திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக கூறி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபடுகிறார்கள்.
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாஜகவினர் நடத்துகின்றனர்.
ராணுவ வீரர் பாபு கொலை செய்யப்பட்டது, தடா பெரியசாமி இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை பாஜக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தமிழக பாஜக முன்வைத்து வருகிறது.

ராணுவ வீரர் கொலை
இதனிடையே, கிருஷ்ணகிரியில் திமுக நிர்வாகியால் ராணுவ வீரர் பாபு கொலை செய்யப்பட்டது, பாஜக நிர்வாகி தடா பெரியசாமி இல்லம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற சம்பவங்களை கண்டித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. திமுக அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பி வருகின்றனர்.

அண்ணாமலை பங்கேற்பு
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டுள்ளார். தமிழக அரசை கண்டித்து நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்களும், தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அண்ணாமலை, இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்காக இன்று சென்னை திரும்பினார்.

மெழுகுவர்த்தி பேரணி
உண்ணாவிரதத்தின் நிறைவாக, மாலையில் ஓமந்தூரார் எஸ்டேட் முதல் போர் நினைவுச்சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி செல்லும் பேரணியிலும் பாஜகவினர் கலந்துகொள்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்துகொள்வதால் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணியை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications