ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற பாஜக கொள்கை அம்பலமாகிவிட்டது.. கே.எஸ்.அழகிரி காட்டம்
சென்னை: புதிய கல்விக் கொள்கை பெயரில் இந்தி மொழியை திணிக்க முயன்றால் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டி வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் எடுக்கிற இத்தகைய முடிவுகளை, தமிழக அரசு துணிவுடன் எதிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் நம்பிக்கை உள்ள பாஜக-வின் சுயரூபம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அமைந்த உடனேயே அம்பலமாகியுள்ளதாக கேஎஸ்அழகிரி சாடியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், புதிய தேசிய கல்விக் கொள்கையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளன. புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையின்படி, ஆறாம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் அறிய, மும்மொழி கொள்கையை கட்டாயமாக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை இந்தி மொழித் திணிப்பை நீண்ட காலமாக எதிர்த்துப் போராடி, தடுத்து நிறுத்திய வரலாறு உண்டு. 1960ம் ஆண்டுகளில் இந்தி பேசாத மக்கள் மீது அம்மொழி திணிக்கப்படுகிறது என்று உருவான அச்சத்தை போக்க, அப்போதைய பிரதமர் நேரு இந்தி பேச விருப்பமில்லாத மக்களை கட்டாயப்படுத்தி அம்மொழியை திணிக்க மாட்டோம் என உறுதி கூறியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் திமுகவின் பலம் 2 உறுப்பினர்களாக மட்டுமே இருந்த போதே, தமிழக மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து நேரு இவ்வாறு அறிவித்தார். மேலும் மக்களவையில் அந்த சமயத்தில் பேசிய அவர், எந்த மொழியையும் எவர் மீதும் திணிக்க கூடாது. நமது அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து மொழிகளும், சம அந்தஸ்துடன் நடத்தப்பட வேண்டும். இந்தியாவில் எந்த மொழியும் மற்ற மொழியை தாண்டி தேசிய மொழியாக இருக்கும் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என முழங்கினார்.
1991-ல் திமுக ஆட்சியை கலைத்தது ஏன்? சு.சுவாமி சொல்லும் பகீர் காரணம்!
தமிழகத்தை பொறுத்த வரை இந்தி பேசாத மக்களுக்கு நேரு வழங்கிய உறுதிமொழி தொடர்ந்து காப்பாற்ற பட வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக அழகிரி தனது அறிக்கையில் கூறியுள்ளார். நேருவின் உறுதிமொழிக்கு எதிர்காலத்தில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதனை தடுக்கவே அன்று பிரதமர்களாக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் ஆட்சி மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததாக நினைவு கூர்ந்துள்ளார்.
இதையெல்லாம் மீறி புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிக்க முயன்றால், கடுமையான போராட்டங்களை காங்கிரஸ் முன்னெடுக்க வேண்டியது இருக்கும் என கேஎஸ்அழகிரி எச்சரித்துள்ளார்.