'10 நாட்கள் டைம் கொடுத்தோம்.. எங்கள் போராட்டத்தாலே கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன..' அண்ணாமலை பன்ச்
சென்னை: வார இறுதி நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ஆத்மார்த்தமாக வரவேற்பதாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைய அதற்கேற்ப ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
கணவருடன் அடிக்கடி சண்டை.. மனவேதனை.. 8 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு.. ஆத்தூரில் சோகம்!
அதேநேரம் 3ஆவது அலை ஏற்படுவதைத் தடுக்க கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் வாரத்தில் கடைசி 3 நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் பக்தர்களின்றி பூஜைகள் நடத்த அனுமதி அளித்திருந்தது.
கோயில் திறப்பு
ஆடி கிருத்திகை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட நாட்களிலும் இதே நிலை தான் இருந்தது. மேலும், வார இறுதி நாட்களில் கோயில்களைத் திறக்க வேண்டும் என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாகப் போராட்டத்தையும் அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் சரஸ்வதி பூஜையையொட்டி கோயில்களைத் திறக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாகத் தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தனர்.
கோயில்களைத் திறக்க அனுமதி
இந்தச் சூழலில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள், உணவகங்கள் 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆத்மார்த்தமாக வரவேற்கிறோம்
இந்நிலையில், கோயில்கள் திறப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் உத்தரவை ஆத்மார்த்தமாக வரவேற்பதாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருக்கோயில்களில் காலையில் வழிபட்டு வியாபாரத்தைத் தொடங்கும் வணிகப் பெருமக்களுக்கும், தினமும் வழிபடும் வழக்கமுடைய மூத்த குடிமக்களுக்கும் தினப்படி வாழ்க்கையில் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த திருக்கோயில்களை எல்லா நாட்களிலும் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்குக் கட்சியின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
10 நாட்களில்
கடந்த அக்.7ம் தேதி பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் மக்களோடு இணைந்து வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக பெருவாரியான போராட்டங்களை நடத்தினர். சென்னை மண்ணடியில் தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் நானும் போராட்டம் நடத்திப் பேசுகையில் இன்னும் 10 நாட்களில் கோயில்களை எல்லா நாட்களிலும் கண்டிப்பாகத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
பாராட்டி வரவேற்கிறோம்
திருவிழா நாட்களிலெல்லாம் திருக்கோயில்களை மூடி இருக்காமல், மக்களுக்கான எங்கள் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, கோயில்களை திறக்கும் முடிவெடுத்த தமிழக அரசைப் பாராட்டி வரவேற்கிறோம். மக்களின் உண்மையான எண்ணங்களைப் பிரதிபலிக்கும் எங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இந்த நவராத்திரி எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு பாஜக சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.