பாஜகவின் நம்ம ஊரு பொங்கல் விழா... தமிழர் பாரம்பரியமான வேட்டி சட்டையில் கலக்கிய ஜே.பி.நட்டா..!
சென்னை: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழர் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டை அணிந்து பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்.
பட்டுவேட்டி உடுத்தி பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அவர், தமிழகம் வளமான கலாச்சாரத்தை கொண்டது என்றும் பக்தி மிக்க மாநிலம் எனவும் தெரிவித்தார்.
பொங்கல் விழாவை தொடர்ந்து துக்ளக் இதழ் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்தில் பாஜக தான் வரும் காலத்தில் எல்லாமுமாக இருக்கும் எனக் கூறினார்.

நட்டா வருகை
பாஜக சார்பில் சென்னை மதுரவாயல் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நம்ம ஊரு பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காகவும், துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காகவும் ஜே.பி.நட்டா வியாழக்கிழமை மாலை டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் மிக பிரம்மாண்டமான வரவேற்பு அளித்த தமிழக பாஜகவினர் பொங்கல் விழா நடைபெறும் இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

தமிழர் பாரம்பரியம்
டெல்லியில் இருந்து கோட் சூட்டில் வந்தவர் பொங்கல் விழா மேடையில் பட்டு வேட்டி சட்டை அணிந்து தோளில் துண்டுடன் காட்சியளித்தார். இது அங்கு திரண்டிருந்த கட்சியினருக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. வேட்டி சட்டையில் நட்டாவை கண்டவுடன் ஆரவாரத்துடன் தங்கள் மகிழ்ச்சியை பாஜகவினர் வெளிப்படுத்தினர்.

பிரதமர் உறுதுணை
தமிழகத்தை பொறுத்தவரை புனிதர்களால் போற்றப்பட்ட மாநிலம் என்றும் பக்தி மிக்க மாநிலம் எனவும் குறிப்பிட்டார். மேலும், தமிழகம் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது எனவும் பிரதமர் மோடி தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பதாகவும் தெரிவித்தார். உலகிலேயே பழமையான மொழி தமிழ் மொழி என்றும் திருவள்ளுவர் மிகப்பெரிய ஆசான் எனவும் புகழாரம் சூட்டினார்.

மோடியின் திட்டங்கள்
அதைத் தொடர்ந்து துக்ளக் இதழ் ஆண்டுவிழாவில் பேசிய ஜே.பி.நட்டா, தமிழகத்தின் கலாச்சாரத்தை மதிக்கிறேன் என்றும் தமிழகத்திற்கு தலை வணங்குகிறேன் எனவும் கூறினார். மேலும், துக்ளக் இதழ் ஆண்டுவிழாவில் அமித்ஷா தான் கலந்துகொள்வதாக இருந்தது என்றும் தவிர்க்க முடியாத காரணத்தால் அமித்ஷா சென்னை வர முடியவில்லை எனவும் கூறினார். பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது எனக் கூறிய அவர் மோடியின் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு நல்ல பயனை தந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

மத்திய அரசின் சாதனைகள்
கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வகையில் மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துகிறார் மோடி என்றும் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாய் தலா ரூ.500 வீதம் தரப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து மத்திய அரசின் சாதனைகளை பேசிய நட்டா, இரவு 9 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு சென்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications