IPS-யை மீண்டும் ஆடு மேய்க்க அனுப்பிய பாஜக -ஆர்எஸ்எஸ்.. அண்ணாமலையை சீண்டிய மனோ தங்கராஜ்
சென்னை: ஆடு மேய்த்தவரை ஐபிஎஸ் ஆக்கியது திராவிடம். ஆனால் ஐபிஎஸ்ஸை மீண்டும் ஆடு மேய்க்க அனுப்பியது பாஜக - ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் அண்ணாமலை. இவர் அந்த பொறுப்பில் இருந்தபோது தினமும் திமுக அரசு மற்றும் திமுக தலைவர்களை விமர்சனம் செய்து வந்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும், எக்ஸ் வலைதள பக்கத்திலும் தொடர்ந்து தனது கருத்துகளை அதிரடியாக தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக பாஜக மாநில தலைவர் மாற்றம் செய்யப்பட்டார். அண்ணாமலைக்கு பதில் தமிழக பாஜக மாநில தலைவராக பாஜக எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக தான் அண்ணாமலையிடம் இருந்து தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரனிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே தான் அண்ணாமலை கடந்த 16ம் தேதி அளித்த பேட்டியில், ‛‛ஆடு, மாடோடு இருக்கிறேன். விவசாயம் பார்க்கிறேன். நேரம் கிடைச்சா கோவிலுக்கு போறேன். தேவையில்லா வேறு வேலைகயை பார்க்காமல் என்னுடைய பணியை சந்தோஷமாக செய்கிறேன். புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். இதிலேயே பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன்'' என்று கூறியிருந்தார்.
அதாவது பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்தபோது அரசியல், கட்சி பணிகளில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இப்போது மாநில தலைவர் பதவி இல்லை என்பதால் மேற்கூறியபடி வாழ்கிறேன் என்று அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்தார். அண்ணாமலையில் இந்த கருத்து பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்று எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தது. அதனை பார்த்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்து இருந்தார்.
‛‛ஆடு மேய்த்தவரை ஐபிஎஸ் ஆக்கியது திராவிடம்...! ஐபிஎஸ்-யை மீண்டும் ஆடு மேய்க்க அனுப்பியது பாஜக - ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்!'' என்று கூறியுள்ளார். அதாவது தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலையை திராவிடம் ஐபிஎஸ் படிக்க வைத்தது. ஆனால் ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்த அவரிடம் இருந்து மாநில தலைவர் பதவியை பறித்து பாஜக - ஆர்எஸ்எஸ் இப்போது மீண்டும் ஆடு மேய்க்க வைத்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். மனோ தங்கராஜின் இந்த கருத்துக்கு திமுகவினர் ஆதரவாகவும், பாஜகவினர் விமர்சனம் செய்தும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications