"பாஜக வளர்கிறது.. ஆனால் பாவம் பொன்னையன் வளரல! அதனாலதான் அப்படி பேசியிருப்பார்!" ஹெச்.ராஜா நச் பதிலடி
சென்னை: பொன்னையன் விமர்சனத்திற்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஈழத் தமிழர்கள் தொடர்பான விமர்சனத்திற்கு நாராயணன் திருப்பதி நறுக் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் இருந்து பல மூத்த நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அப்படி தான் மூத்த தலைவரான பொன்னையன் கலந்து கொண்டார்.

பொன்னையன்
இந்தக் கூட்டத்தில் பேசிய பொன்னையன், "தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பாஜகவின் பருப்பு வேகாது. பாஜக தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற மாயை உருவாக்கப்படுகிறது. அது உண்மையில்லை" என்று விமர்சித்து இருந்தார். மேலும், இந்தி, நீட், காவிரி, ஜிஎஸ்டி, ஈழ தமிழர்கள் விவகாரங்களிலும் அவர் பாஜகவைச் சாடி இருந்தார்.

ஹெச் ராஜா
இந்த கருத்திற்கு பாஜகவில் இருந்து கடும் எதிர்வினை வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, விபி துரைசாமி, நாராயணன் திருப்பதி ஆகியோர் பொன்னையனை சாடியுள்ளனர். இந்தச் சூழலில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜாவும் இது குறித்து கருத்து கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் நிலையில், தன்னால் வளர முடியவில்லை என்ற ஆதங்கத்தில் பொன்னையன் பேசியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

ஜிஎஸ்டி
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, "முதல்வர் ஸ்டாலின் பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு ஜிஎஸ்டி குறித்துப் புரிதல் இல்லாமல் பேசி இருந்தார். மே 31 வரை நிலுவையில் இருந்த ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு தமிழகத்திற்குக் கொடுத்துள்ளது. முதல்வர் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ 14,000 கோடி எனக் கூறியது தவறு. பெட்ரோலுக்கு மத்திய அரசின் கலால் வரியை விடத் தமிழக அரசு இரண்டு ரூபாய் ஐந்து பைசாவும், டீசலுக்கு இரண்டு ரூபாய் இருபது பைசாவும் அதிகமாக வரி விதிக்கிறது.

பொன்னையன் விவகாரம்
பொன்னையன் அதிமுக நிர்வாகத்தில் ஆக்டிவாக இல்லை. தமிழ்நாட்டில் பாஜக தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் பொன்னையன் வளரவில்லை. அவருக்கு வயதாகிவிட்டது. அவர் கூறுவதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இதே கருத்தை இபிஎஸ் அல்லது ஓபிஎஸ் கூறி இருந்தால் அதற்குக் கருத்து கூறி இருக்கலாம். பாஜக வளர்ந்து வருவதைப் போராட்டங்களில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

தேசியவாதம் தான் மாற்று
பிரிவினைவாத திராவிட மாடலுக்கு தேசியம் தான் மாற்று என்பதைத் தமிழக மக்கள் உணர தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் பொங்கல் தொகுப்பில் மட்டும் ஊழல் நடைபெறவில்லை. அனைத்திலும் ஊழல் தான். ஏற்கனவே வரும் மக்களவை தேர்தலில் தொகுதிக்கு ரூ.100 கோடி செலவழிக்கத் தயார் என்று திமுக அமைச்சர் ஒருவர் கூறி வருகிறார். ஊழலை நாம் உடனடியாக விரட்டியடிக்கப்பட வேண்டும். திமுகவில் இரு அமைச்சர்கள் மட்டும் ஊழல் செய்யவில்லை. உணவுத்துறை அமைச்சர் மெகா ஊழல் செய்துள்ளார்" என்று கடுமையாகச் சாடினார்.












Click it and Unblock the Notifications