ரூட் மாறுதே.. பாஜக பக்கம் விஜயை தள்ளிவிட்ட சம்பவம்! சைலண்டாய் காய் நகர்த்தும் டெல்லி.. 2026 பரபர
சென்னை: கரூர் நெரிசல் விபத்து சம்பவத்தால் தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகள் எழுந்துள்ள நிலையில், பாஜக தமிழக வெற்றிக் கழகத்திற்கு பின்னணியில் இருந்து உதவுகிறதா? என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது. கரூர் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என பாஜக தலைவர்கள் கூறுவதே தவெகவை பாஜக கூட்டணிக்கு அழைக்கும் முயற்சி தான் என்கிறனர். இதனால் 2026 தேர்தலில் அதிமுக, பாஜக, தவெக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே அணியில் இணையப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த நிலையில் தனியாக போட்டியிட்டது. ஆனால் எதிர்பார்த்த வாக்கு விகிதத்தைப் பெற முடியாமல் போனது. இதனால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
மறுபுறம், பாஜக தன் அடிப்படை வாக்கு வங்கியை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யும் நோக்கில் புதிய கூட்டணிகளை தேடி வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், புதிய சக்தியாக உருவெடுத்து வரும் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க வுடனும் இணைந்து புதிய கூட்டணியை அமைப்பது பற்றியும் பேசி வருகிறது.


பாஜக தவெக கூட்டணி
த.வெ.க. தற்போது தன்னிச்சையான அரசியல் பாதையில் செல்கிறது. ஆனால் 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்றால், ஏற்கனவே களத்தில் இருக்கும் கட்சிகளுடன் இணைவது அவர்களுக்கு ஒரு பெரிய அரசியல் வாய்ப்பாக இருக்கும் என சில தலைவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், கட்சி நிர்வாகிகள் இதுவரை எந்தக் கூட்டணியையும் உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை மூன்று கட்சிகளும் இணைந்தால், அது தமிழ்நாட்டு அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கூட்டணிஆக இருக்கும்.
கரூர் விபத்து அரசியல்
இதனால் திமுக தலைமையிலான ஆட்சி கட்சிக்கு கடுமையான போட்டி உருவாகும் வாய்ப்பும் அதிகம். தற்போது ஆலோசனைகள் ஆரம்ப நிலையில் இருந்தாலும், பின்னணியில் முக்கிய தலைவர்கள் மத்தியில் மறைமுகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் தான், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க. தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
தவெகக்கு சட்ட உதவி
இந்த சம்பவத்திற்குப் பிறகு, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீதும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த கடுமையான சட்ட நடவடிக்கைகள் நடந்து வரும் சூழ்நிலையில், பாஜக சில தலைவர்கள் த.வெ.க. மீது கடுமையான விமர்சனங்களை வைக்காமல், மௌனமாக இருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாஜக ஆதரவு
சில பாஜக தலைவர்கள், "இந்த விஷயம் ஒரு துயரமான விபத்து, அதை அரசியலாக்க வேண்டாம்" எனக் கூறி த.வெ.க.க்கு மறைமுக ஆதரவை வழங்கியுள்ளனர். மேலும், புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், பாஜக வட்டாரங்களில் இருந்து சில சட்ட ஆலோசனைகள் மற்றும் ஆதரவுகள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது இரு கட்சிகளுக்குமிடையே நெருக்கம் அதிகரித்துள்ளது என்பதற்கான சிக்னலாகப் பார்க்கப்படுகிறது.
பாஜக தவெக கூட்டணி
மேலும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை ஒருவரான ஆதவ் அர்ஜுன டெல்லி சென்றிருப்பதும் இது போன்ற யூகங்களை உறுதி செய்வதாக அமைந்திருக்கிறது. இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் த.வெ.க. இடையே கூட்டணி அமைக்கும் சாத்தியம் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மொத்தத்தில் பார்க்கும்போது, பாஜக வெளிப்படையாக த.வெ.க.க்கு ஆதரவு அளிப்பதாகத் தெரியவில்லை என்றாலும், மறைமுக அரசியல் மற்றும் சட்ட ஆதரவு வழங்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. விரைவில் இது கூட்டணியாக மாறும் என்கின்றனர் டெல்லி வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications