டெல்லி முடிவால் ஏக குஷியில் ‘தென் முனை’ சீனியர்.. டிக்கெட் நிச்சயம்.. அடுத்து என்ன மினிஸ்டர் தான்!
பாஜக தலைமையின் முடிவால், தென் முனை முக்கிய புள்ளி ஏக குஷியில் இருக்கிறாராம்.
சென்னை : சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில், அவருக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியோ, அதைவிட கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் குமரி முனை பாஜக சீனியர் புள்ளி. கட்சியில் சீனியர்கள் அனைவருக்கும் உரிய மரியாதை கொடுத்து வரும் கட்சி தலைமை, தனக்கான சீட்டையும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் அவர்.
அண்ணாமலை பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு சீனியர் பாஜக தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதற்கு மாறான சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கட்சிக்காக நீண்டகாலம் பணியாற்றியவர்களை டெல்லி தலைமை கைவிடாது என்பதை உறுதி செய்யும் வகையில் சமீபத்திய நடவடிக்கைகள் இருக்கின்றன. இதனால், தனது ஆசையும் கண்டிப்பாக நிறைவேறும் என தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம் பொன்னான குமரி புள்ளி.

பாஜக குறி
பாஜக தலைமை, வரும் 2024 எம்.பி தேர்தலில் தமிழ்நாட்டில் கணிசமான இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 4 இடங்களைப் பிடித்த பாஜக, நம்பிக்கையோடு 2024 எம்பி தேர்தலுக்கு தயாராகி வருகிறது. 25 தொகுதிகளில் வெற்றி பெறுவது தங்கள் இலக்கு என பாஜக தலைவர்கள் கூறி வந்தாலும், 8 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் அதிரடியாக வியூகங்களை அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதையொட்டியே, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.

சீனியர்களுக்கு கல்தா
மேலும், மத்திய அமைச்சர்கள் பலரும் தமிழ்நாட்டுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் சில அமைச்சர்களாவது தமிழ்நாட்டுக்கு விசிட் அடிக்கின்றனர். இப்படி பாஜகவின் நகர்வுகள் தேர்தலை நோக்கியே இருக்கின்றன. இதற்கிடையே, பாஜக நிற்கவிருக்கும் தொகுதிகளில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது வரை மாநில தலைவர் அண்ணாமலை லிஸ்ட் போட்டு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலை போட்டு வைத்திருக்கும் லிஸ்ட்டில் சீனியர்கள் பலருக்கு கல்தா கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

டெல்லியில் முகாம்
இதனால் அதிர்ச்சியடைந்த மாஜி அமைச்சரான குமரி புள்ளி, தனக்கு இந்த முறை சீட் வேண்டும் என்று தலைமையை வலியுறுத்தி வந்தார். கடந்த டிசம்பர் மாதம் டெல்லி சென்ற அவர், பிரதமர் மோடியைச் சந்தித்தார். பின்னர், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் சந்தித்ததோடு, சில மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பினார். தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை வைத்தது தான் சட்டம் என நிர்வாகிகள் மத்தியில் முணுமுணுப்புகள் இருந்து வந்த நிலையில் குமரி முனை புள்ளி டெல்லிக்கே நேரடியாகச் சென்று பேசியது பாஜக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.

மகிழ்ச்சியில் குமரி புள்ளி
இந்நிலையில் தான், ஆளுநர் நியமனத்தில் டெல்லி பாஜக தலைமை ஒரு தெளிவான பாதையை குமரி புள்ளிக்கும் காட்டியிருக்கிறதாம். முன்னாள் எம்.பியான சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தேர்வு செய்தது பாஜக தலைமை. தமிழ்நாடு பாஜக தலைவர்களில் நிச்சயம் ஒருவர் ஆளுநர் ஆக்கப்படுவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்த வாய்ப்பு சிபி.ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. இதில், சிபிஆரை விட குமரி முனையில் இருக்கும் அந்த பாஜக புள்ளிக்கு ஏக சந்தோஷமாம்.

எம்.பி - மந்திரி
அதாவது, கட்சியின் சீனியர்களை பாஜக தலைமை கைவிடாது என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டுள்ளதாம். அதோடு, கட்சியில் ரிட்டயர்மெண்ட் பலனாக கொடுக்கப்படுவதுதான் ஆளுநர் பதவி, அந்த நிலை தனக்கு இன்னும் வரவில்லை என்று தலைமையே நினைக்கிறது, எனவே, 2024 தேர்தலில் கட்டாயம் தனக்கு எம்.பி சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். எம்.பி ஆனால், சீனியாரிட்டி அடிப்படையில் நிச்சயம் அமைச்சராகி விடலாம் என்ற கணக்கும் அவருக்கு இருக்கிறதாம். இதனால், கடந்த சில நாட்களாக களத்தில் சுறுசுறுப்பாக இறங்கி பணியாற்றி வருகிறாராம்.












Click it and Unblock the Notifications