அண்ணாமலை கைது.. டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட சென்றபோது வழிமறித்து ஆக்ஷன்!
சென்னை: சென்னையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி பாஜகவினர் இன்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.முக்கிய பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, அதனைக் கண்டித்து 17 ஆம் தேதி அதாவது இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்திற்கு வெளியே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த செல்ல முயன்ற பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த கானாத்தூரில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சந்திப்பு அருகே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டாஸ்மாக் நிறுவனம், மதுபான அமைச்சர் தொடர்புடைய இடங்கள் மற்றும் மதுபான விநியோக நிறுவனங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மாயையான அச்சங்களைப் பரப்பி வருகிறார். கணக்கில் வராத ரூ.1,000 கோடி பணம் லஞ்சமாக வழங்கப்பட்டது தொடர்பான மதுபான ஆலைகளிலிருந்து ஆவணங்களை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.
அமைப்பை மோசடி செய்வதன் மூலம் தங்கள் கட்சியின் கஜானாவை நிரப்புவதற்காக தி.மு.க. பொது மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த லஞ்சத்தைப் பெற்றதற்காக, மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. தமிழக முதல்மைச்சராக தொடர தனக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்றும் அவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க மார்ச் 17, 2025 அன்று சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்திற்கு வெளியே ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஊழல் நிறைந்த தி.மு.க அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக மக்கள் பெருமளவில் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள் பணம் சம்பாதிப்பதற்கென்றே நடத்தப்படும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ரூ.1,000 கோடி ஊழல் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. திமுக அரசின் இந்த மெகா ஊழலைக் கண்டித்து, வரும் 17.03.2025 அன்று, பாஜக சார்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் தாளமுத்து நடராஜன் மாளிகையில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்." என அண்ணாமலை அறிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications