ஆருத்ரா மோசடி! என் உயிருக்கே ஆபத்து.. அண்ணாமலை மீது பகீர் குற்றச்சாட்டு.. பாஜக மாநில நிர்வாகி விலகல்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரியாக செயல்படவில்லை. பணம் கொடுத்தால் கட்சியில் பொறுப்பு கொடுக்கிறார் என பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்த பாஜக மாநில பொருளாதார பிரிவு செயலாளர் எம்.ஆர். கிருஷ்ணபிரபு அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிப்பும் மரியாதைக்குரிய மாநில தலைவர் அண்ணாமலைக்கு பொருளாதார பிரிவில் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும் மரியாதைக்குரிய கேசவ விநாயகமும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும் கட்சியில் நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது.

அதற்கும் மேல் நேர்மாறாக அவர்களது சுய லாபத்திற்காகவும் மதம் சார்பற்ற கட்சி என கூறிக் கொண்டு தமிழ்நாட்டுக்குள் பலவிதமான சச்சரவுகளையும் மேலும் எங்களிடமிருந்து தொண்டர்கள் நிர்வாகிகள் இருந்தும் பணம் வசூலிக்க சொல்லியும் மேலும் பணத்தை பெற்றுக் கொண்டும் பல விதமான அரசியல்களை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
ஜனநாயகம்: எங்களை நீங்கள் ஜனநாயகத்திற்கு எதிராக எங்களை வற்புறுத்தி சில விஷயங்களையும் கோரிக்கைகளையும் செய்ய சொல்வதாலும் என்னைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சிக்கும் உங்களுக்கும் உண்மையாக வேலை பார்த்த நிர்மல் குமாரை போன்ற நிர்வாகிகளையும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கி எந்த ஒரு கட்சி வேலையிலும் செயல்பட விடாமல் செய்தனர்.

ஆருத்ரா மோசடி: மேலும் ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகிறது. இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை. இந்த கட்சி என்னையும் என் குடும்பத்தாரையும் பழுது பரா்த்துவிட்டனர். மேலும் இந்த பொருளாதார பிரிவின் பிரச்சினைகளையும் நேரடியாக உங்களுக்கும் கட்சி அலுவலகத்துக்கும் பிரச்சினைகளை சொல்லியும் இதுவரை நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நான் எனது பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.
பொருளாதார பிரிவு: எதற்கு முழு காரணமாக இருக்கும் பொருளாதார பிரிவின் மாநில தலைவர் ஷா, மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் நரசிங்க பெருமாள் இவர்கள் எல்லாரையும் வழிநடத்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய நீங்கள்தான். நீங்கள் சரிபட செயல்படவில்லை என்று குறிப்பிடுகிறேன். பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என ஊர்ஜிதமான உண்மை. இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன.

உயிருக்கே ஆபத்து: இதற்கும் மேல் பாஜகவில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே பல பாதிப்பு வரும் என்று நினைத்து இந்த கட்சியிலிருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு கிருஷ்ணபிரபு பகீர் காரணங்களை கூறியுள்ளார். பாஜகவில் இருந்து ஐடி விங் செயலாளர் நிர்மல் குமார் விலகியது முதல் அடுத்தடுத்து பல நிர்வாகிகள் கொத்து கொத்தாக வெளியேறி வருகிறார்கள். அவர்களில் சிலர் அண்ணாமலைக்கு எதிராக பல புகார்களை முன் வைத்து செல்கிறார்கள். காயத்ரி ரகுராமும் அண்ணாமலைக்கு எதிராக புகாரை முன் வைத்தே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications