என்ன இது? இப்பதானே முடிஞ்சுது.. அண்ணாமலைக்கு ‘ஷாக்’ கொடுத்த எடப்பாடி! மாநில நிர்வாகி திடீர் ‘ஜம்ப்’!
சென்னை : பாஜக மாநில நிர்வாகி பொன்.கந்தசாமி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இன்று அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப சில நாட்களாக பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்தது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இது அதிமுக - பாஜக கூட்டணியிலும் உரசலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என உறுதிப்படுத்திய = நிலையில் தற்போது பாஜகவின் மாநில நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்துள்ளார்.

பாஜக டூ அதிமுக
கடந்த சில வாரங்களாக பாஜகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள், அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்தார். தமிழ்நாடு பாஜகவின் ஐடி பிரிவு செயலாளராக இருந்த திலிப் கண்ணன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருந்தார். அதேபோல், பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணனும் அதிமுகவில் இணைந்தார். ஐடி விங் மாவட்ட நிர்வாகிகள் பலர் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர்.

கூட்டணியில் உரசல்
இவர்களைத் தொடர்ந்து பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால், கூட்டணிக்குள் கடுமையான உரசலும் ஏற்பட்டது. பாஜகவில் இருந்து விலகியவர்கள் அண்ணாமலையை விமர்சிக்க, பதிலுக்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தனர். அதற்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் பாஜகவை கடுமையாக கண்டித்தனர். இதனால் கடுமையாக டென்ஷன் ஆன அண்ணாமலை திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அண்ணாமலை அறிவித்தார்.

அதிமுக உடன் தான்
இதனையடுத்து டெல்லிக்குச் சென்று பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து தனது கருத்தையும் அண்ணாமலை தெரிவித்தார். ஆனால் தேசிய தலைமையோ அதிமுகவுடன் தான் தமிழ்நாட்டில் கூட்டணி அமைக்கவேண்டும் என உறுதிபடக் கூறி அண்ணாமலையைத் திருப்பி அனுப்பியது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமித் ஷா தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் எனத் தெரிவித்தார்.

எடப்பாடியும் ஓகே
பாஜக - அதிமுக கூட்டணி விவகாரம் குறித்த கேள்விக்கு நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசுகையில், அதிமுக - பாஜக கூட்டணியில்தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பாஜக - அதிமுக கூட்டணி விஷயத்தில் அமித்ஷாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உறுதிபடத் தெரிவித்ததால் இரு கட்சிகள் இடையே இணக்கம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் சூழல் தென்பட்டது.

மறுபடியும் மொதல்ல இருந்தா?
இந்த நிலையில் தான் மீண்டும் உரசலை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது, பாஜக கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் பொன்.கந்தசாமி, அக்கட்சியில் இருந்து விலகி இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சில நாட்களாக பாஜகவில் இருந்து முக்கிய தலைகள் யாரும் விலகாமல் இருந்து வந்த சூழலில், இன்று மாநில நிர்வாகி ஒருவர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். பாஜக மாநிலப் பொறுப்பில் உள்ளவரை ஈபிஎஸ் தட்டித் தூக்கியிருப்பது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications