டாஸ்மாக் ஊழல்.. செந்தில் பாலாஜி என்ன செய்தார் தெரியுமா? “விளக்கிய” அண்ணாமலை!
சென்னை: சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று டாஸ்மாக் டெண்டர் மூலமாக ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவன டெண்டரில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அதிமுக ஆட்சியில் என்ன கொள்கை பின்பற்றப்பட்டதோ, அதே கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசு பதிவு செய்த எஃப்ஐஆர் மூலமாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. அண்ணாமலை கூறிய ஆயிரம் கோடி முறைகேடு என்பதையே அமலாக்கத்துறை கூறுவதாக தெரிவித்தார்.

அண்ணாமலை பேட்டி
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், டாஸ்மாக் நிறுவனம், சாராய நிறுவனங்கள் மற்றும் பாட்டிலிங் கம்பெனி என்று 3 நிறுவனங்கள் உள்ளன. டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் 40 சதவிகித சாராயம் முறையாக வரக் கூடிய பாதையில் வரவில்லை. அதாவது 100 லிட்டர் விற்பனையானால் அதில் 40 சதவிகிதம் வெளியில் இருந்து வருகிறது.
கூடுதல் விலை
அமலாக்கத்துறை ரெய்டை பொறுத்தவரை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை டாஸ்மாக் தொடர்பாக பலவிதமான எஃப்ஐஆரை பதிவு செய்துள்ளது. அதனை 3 ரகமாக பிரிக்கலாம். அதாவது ஒரு டாஸ்மாக்கின் ஒரு மதுபான கடையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வாங்குகிறார்கள். இதுவொரு எஃப்ஐஆர்.
3 எஃப்ஐஆர்
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் எந்த ஆலைக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை பின்னுள்ள சாராய ஆலையுடன் பேசி சாராயம் வாங்குவது 2வது எஃப்ஐஆர். இதன்பின் டாஸ்மாக் அதிகாரிகள் மதுபான படைகளுக்கு சாராயம் அனுப்பும் போது, பணம் பெற்றுக் கொண்டு பாட்டில்களை அனுப்புகிறார்கள். இதுதான் 3வது எஃப்ஐஆர். இந்த 3 எஃப் ஐஆரையும் அமலாக்கத்துறை கையில் எடுக்கிறது.
போலி கணக்கு
இதனை அடிப்படையாக வைத்தே சோதனை நடக்கிறது. 5 நாள் சோதனைக்கு பின் அமலாக்கத்துறை தரப்பில் கூறி இருப்பது, டாஸ்மாக்கின் போக்குவரத்து ஊழல். ரூ.100 கோடிக்கு மேல் முறையில்லாமல் பாட்டிலை எந்த வண்டியில் எடுத்து செல்ல வேண்டும் என்பதில், முறைகேடு நடந்திருக்கிறது. அதேபோல் சாராயம் தயாரிப்பதற்கு பொருள் வாங்கும் போது ஆலைகளில் அதற்கு போலி கணக்கு எழுதியுள்ளனர்.
பாட்லிங் நிறுவனம்
இது ஜெகத்ரட்சகன் நிறுவனத்தில் நடந்த ரெய்டில் வருமான வரித்துறை கொடுத்த செய்தி குறிப்பிலேயே தெரிய வந்துள்ளது. அதேபோல் இதனை சாராய ஆலையால் மட்டுமே தனியாக செய்ய முடியாது. இதன்பின் பாட்லிங் நிறுவனம் தான் பாட்டில் போட வேண்டும். அதாவது சாராயத்திற்கு பாட்டில் போட்டு, அதற்கு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.
போலி பாட்டில், ஸ்டிக்கர்
வழக்கமாக சாராய ஆலைகள் பெரும்பாலும் தங்களது பினாமி பெயரிலோ அல்லது நேரடி தொடர்பு இல்லாமல் மறைமுக தொடர்புடன் நடத்துவார்கள். ஏனென்றால் கூடுதல் சாராயத்திற்கு கூடுதல் பாட்டில்கள் வேண்டும். இது சட்டீஸ்கரில் நடந்த முறைகேட்டை போன்றதுதான். போலி ஸ்டிக்கர், போலி பாட்டில் கேப் என்று அனைத்தையும் பார்க்க வேண்டும்.
டாஸ்மாக் நிறுவன பணி
இதில் டாஸ்மாக் நிறுவன பணி என்னவென்றால், எவ்வளவு ஸ்டிக்கர் கொடுத்துள்ளோம், எவ்வளவு ஸ்டிக்கர் திரும்ப வந்துள்ளது என்பதுதான். சட்டீஸ்கரில் கூடுதல் ஸ்டிக்கர், கூடுதல் பாட்டில், கூடுதல் கேப் என்று முறைகேடு செய்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தனி நெட்வொர்க். தனி நெட்வொர்க் மூலமாக பணத்தை வெளியில் எடுத்துள்ளார்கள்.
மின்சார கட்டணம்
சாராய ஆலைகள் ஒரிஜினலாக செய்த சாராயத்திற்கு அதிக கணக்கு காட்டியுள்ளார்கள். இதனை எப்படி கண்டுபிடிக்கலாம் என்றால், அந்தந்த ஆலைகளில் பயன்படுத்திய மின்சாரத்தை வைத்தே கண்டுபிடித்துவிட முடியும். கூடுதல் சாராயம் உருவாக்கி இருந்தால், அதிக மின்சாரம் கட்டணம் வரும். சட்டீஸ்கரில் இப்படிதான் முறைகேடு தொடர்பாக குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது.
சிறையில் அடைக்க வேண்டும்
தமிழ்நாட்டில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பாக இவ்வளவுதான் எனக்கு தெரியும். இந்த முறைகேடு நடந்திருப்பதால்தான் பாஜக கம்பீரமாக முன்னின்று பேசுகிறது. சட்டீஸ்கரை தாண்டி ஒரு ஊழல் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. அமலாக்கத்துறை நேர்மையாக விசாரணை செய்ய வேண்டும். இதில் தொடர்புடைய அனைவரையும் சிறையில் வைக்க வேண்டும்.
ஜனநாயக கேலிக்கூத்து
குறிப்பாக செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே போக்குவரத்து துறையில் ஊழல் செய்து சிறையில் இருந்து ஜாமீனில் இருக்கிறார். இன்று அவர் தொடர்புடைய துறை, மீண்டும் அமலாக்கத்துறையிடம் சிக்குகிறது. இது ஜனநாயகக் கேலிகூத்து என்றே சொல்ல வேண்டும்.
பாஜக ஆர்ப்பாட்டம்
வரும் 17ஆம் தேதி பாஜக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். அதன்பின் மதுபான கடையை முற்றுகையிட்டு பாஜக தொடர் போராட்டத்தில் ஈடுபடும். அமலாக்கத்துறை இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, மும்மொழி கொள்கை என்பது தமிழ், ஆங்கிலம் மற்றும் 3வது மொழியாகும்.
தமிழக அரசின் டிராமா
மத்திய அரசின் மீது குறை சொல்வதே திமுகவின் வேலையாக செய்து வருகிறது. குழந்தைகளுக்கு 3 மொழி கொடுக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதால், தொடர்ந்து பேசி வருகிறோம். மும்மொழி கொள்கை தொடர்பாக தமிழக அமைச்சர்கள், எம்பி-க்கள் டெல்லியில் சென்று என்ன டிராமா செய்தார்கள் என்பதை வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications