எய்ம்ஸ் செங்கல், சனாதன தர்மம் ஒழிப்பு.. இந்தியா முழுவதும் பாஜகவின் டார்கெட்டான உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் இன்றைக்கும் இந்தியா முழுவதும் பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகிற அளவுக்கு திராவிட சித்தாந்தத்தை முழங்கியவர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவோம் என்ற பாஜகவின் மோசடித் தனத்தை ஒற்றை செங்கல்லை ஊர் ஊராக தூக்கி காட்டி அதிரவைத்தவர்; சனாதன தர்மம் என்பதை டெங்கு, மலேசியா கொசு போல ஒழித்துக் கட்ட வேண்டும் என பேசி இன்றைக்கும் சனாதனிகளின் தூக்கத்தை கெடுத்துவிட்டவர்தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அரசியல் பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து, தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த ஆளுமை, நவீன தமிழ்நாட்டின் சிற்பி கருணாநிதியின் பேரனாக இருந்து அரசியலுக்கு வந்தவர்தான். அரசியல் பயணம் 5 ஆண்டுகள்தான்.. ஆனால் உதயநிதி ஸ்டாலின் அடித்த அடி, சாதாரண அடி அல்ல.

திமுகவின் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றதுமே அத்தனை ஊர்களிலும் திராவிடர் இயக்க பாசறைக் கூட்டங்களை நடத்தினார். திராவிடர் இயக்க சித்தாந்தவாதிகள் அத்தனை பேரையும் மேடையேற்றி பயிற்சி வகுப்பு எடுக்க வைத்தார். திமுகவை திராவிடர் இயக்க கொள்கை வழித்தடத்தில் தொடர்ந்து பயணிக்க வைக்க பெரு முயற்சிகளை மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.
இதன் தொடர்ச்சியாகவே சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா கொசுவைப் போல ஒழிப்போம் என பேசினார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் பாஜகவினரோ, சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்வோம் என பேசிவிட்டார் உதயநிதி ஸ்டாலின் என பொய் பிரசாரம் செய்தனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டப்பட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் தர உத்தரவிடப்பட்டது. அப்போது முதல் இன்று வரை உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம ஒழிப்புப் பேச்சையே பாஜக பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் உதயநிதியின் பெயரைக் குறிப்பிடாமலேயே விமர்சித்து வருகிறார்.
அத்துடன் உதயநிதி ஸ்டாலின் மீது ஒவ்வொரு மாநிலத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை கண்டு அஞ்சாமல், அத்தனை வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரியுங்கள்... உரிய பதிலடி தருகிறோம் என்கிறார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ10 கோடி விலை வைத்தனர் இந்துத்துவா தீவிரவாதிகள். அப்போதும் அசராமல், ஒரு சாமியாரிடம் ரூ10 கோடி இருக்கிறது எனில் நீ என்ன டூப்ளிகேட் சாமியாரா? என பொளேர் பதிலடி தந்தார் உதயநிதி ஸ்டாலின்.
மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டாமல் மத்திய பாஜக அரசு மோசடி செய்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில் ஊர் ஊராக ஒற்றை செங்கல்லை கையில் ஏந்தி பிரசாரம் செய்த காட்சிகள் இன்னமும் பாஜகவினரை அலற வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போட்டு முகவாய் மகிழ்ந்து கொண்டிருந்த கூட்டம் இன்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்கும் நிலையில் என்ன மனநிலையில் இருக்குமோ! அதே நேரத்தில் தமக்கு பதவி கொடுக்கப்படவில்லை; பொறுப்புதான் கொடுக்கப்பட்டுள்ளது; தம் மீதான விமர்சனங்களுக்கு செயல்பாடு மூலம் பதில் தருவேன் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பதும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications