தமிழகத்தில் பாஜக மோசமான தோல்வி.. அறிக்கை கேட்கும் டெல்லி மேலிடம்.. நயினார் மாற்றமா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 27 இடங்களில் போட்டியிட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பல முறை வந்து பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் வெறும் ஒரு தொகுதியில் (ஊட்டி) மட்டுமே பாஜக வென்றது. அதுவும் சுமார் 1000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது பாஜக. 26 தொகுதிகளில் தோற்றதால், மோசமான தோல்வி குறித்து ஆராய அக்கட்சியின் தேசிய தலைமை அறிக்கை கேட்டிருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்திரராஜன், வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர் எல் முருகன் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் போட்டியிட்டனர். அண்ணாமலை மட்டும் போட்டியிடவில்லை..

பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வந்தபோது, ஒரு இடத்தில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது. ஊட்டி தொகுதியை தவிர பாஜக எங்குமே வெல்லவில்லை..மற்ற 26 இடங்களில் மோசமான தோல்வியை தழுவியது.
தாமரை சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரும் தோல்வியை தழுவினர். பா.ஜனதாவின் நட்சத்திர வேட்பாளர்களான மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோரும் தோல்வியை சந்தித்தனர். இது பாஜக டெல்லி மேலிடத்தையே ஆடிப்போக வைத்துள்ளது. இந்தநிலையில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பா.ஜனதா தேசிய தலைமை தொடங்கியுள்ளது.
தமிழக பா.ஜனதாவின் படுதோல்விக்கு என்ன காரணம்? என்பது குறித்து ஆராய்ந்து, அறிக்கை அனுப்ப மத்திய பாஜக கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக விரைவில் தமிழக பாஜகவில் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு தோல்வி குறித்து ஆராயும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 12 இடங்களில் 2-ம் பிடித்தது. கணிசமான வாக்குகளை பெற்று, வாக்கு சதவீதத்தையும் அதிகரித்தும் இருந்தது. ஆனால், தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக பெருவாரியான வாக்குகளை இழந்துள்ளளது குறித்து குழு ஆராய இருக்கிறது.
இதற்கிடையே, தமிழக பா.ஜனதா மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அண்ணாமலை 2024 தேர்தலில் அதிமுகவை முக்கியமான தொகுதிகளில் கூட வீழ்த்தி இருந்தார். பாஜக வெற்றிபெற முடியாவிட்டாலும் 8 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றிருந்தது. கட்சியாக பாஜக வளர்ந்தும் இருந்தது.
ஆனால் இப்போது பாஜக மோசமாக தோற்றுள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் அண்ணாமலை இருப்பதால் அவரை பாஜக மாநில தலைவராக மீண்டும் நியமிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனிடையே பாஜக நிர்வாகிகள் கூறும்போது, "எல்லா கட்சியிலும் இது நடக்கிற ஒன்று தான். தோல்வி என்று வரும்போது அது பற்றி ஆராயப்படும். பாஜகவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு ஆய்வு அவசியம் தான்" என்றார்கள்














Click it and Unblock the Notifications