வதந்தி பரப்பிட்டேன்.. போலீஸ் ஜீப்பில் ஏற்றும் போது.. கதறி அழுத பாஜக ஆதரவாளர்.. குமரியில் பரபரப்பு!
சென்னை: ஒடிசா ரயில் விபத்து குறித்து மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வதந்தி பரப்பிய கன்னியாகுமரியைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் செந்தில் குமார் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே இருந்த சரக்கு ரயிலுடன் கோரமண்டல் ரயில் மோதியதில் அடுத்த சில நிமிடங்களில் பெங்களூர் ரயிலும் மோத பயங்கர விபத்து ஏற்பட்டது.

ஒடிசா ரயில் விபத்து இந்திய ரயில்வே விபத்துகளில் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒடிசா ரயில் விபத்தின் துயரம் அடங்கும் முன் அதை வைத்து ஒரு கும்பல் மத கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. முக்கியமாக இந்த விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியாத நிலையில் அதை வைத்து மத ரீதியாக பலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக ஆதரவாளர் செந்தில் குமார் என்பவர் இணையத்தில் இதேபோல் வதந்திகளை பரப்பினார். அதில்.. ஒடிசா விபத்து ஏற்பட இஸ்லாமியர்தான் காரணம். விபத்து ஏற்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு இஸ்லாமியர்.
அவர்தான் சிக்னலை மாற்றிக்கொடுத்தார். அவர் தவறாக சிக்னல் கொடுத்த காரணத்தால்தான் விபத்து ஏற்பட்டது. இதனால்தான் பலர் பலியானார்கள். தற்போது அந்த இஸ்லாமியர் தலைமறைவாகிவிட்டார் என்று பொய்யான போஸ்டை போட்டு இருந்தார்.
இதற்காக வேறு ரயில் நிலையம் ஒன்றில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றையும் பகிர்ந்து அவர் சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் அதை உண்மை என்றும் நம்பி இணையத்திலோ பகிர்ந்து வந்தனர். இது இணையத்தில் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து கன்னியாகுமரியை சேர்ந்த அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒடிசா ரயில் விபத்து குறித்து மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வதந்தி பரப்பிய கன்னியாகுமரியைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் செந்தில் குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். 4 பிரிவுகளில் போலீசார் அவர் மீது வழக்கு
இவரை கைது செய்யும் போது அவருடன் பாஜக நிர்வாகிகள் யாரும் உடன் இல்லை. அவரை ஜீப்பில் ஏற்றிய போது குடும்பமே சுற்றி நின்று மன்னிப்பு கேட்டு கதறி அழுதுள்ளது. அவரும் தெரியாமல் வதந்தி பரப்பிவிட்டதாக கூறி ஜீப்பில் கதறி அழுதுள்ளார். இதை அந்த பகுதி மக்கள் சுற்றி நின்று பார்த்தனர்.
சமீபத்தில்தான் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த பாஜகவை சேர்ந்த கட்டெறும்பு என்னும் இசக்கி கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளே ஒரு யுவராஜ் இருக்கலாம்.. ஆனால் வெளியே ஆயிரம் யுவராஜ் இருக்கிறோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் இவர் போஸ்ட் செய்து இருந்தார்.
ட்விட்டரில் கட்டெறும்பு என்னும் பெயரில் இயங்கி வரும் இசக்கி ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை போஸ்ட் செய்து வருகிறார். இவர் பாஜக நிர்வாகி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று போலீசார் மூலம் இசக்கி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications