ஃபயாஸ்தீனை “டார்கெட்” செய்த பாஜக ஆதரவாளர்கள்.. ஐடி ரெய்டு போகனுமாம்! நீட்டை சாடிய MBBS மாணவராச்சே
சென்னை: நீட் தேர்வு தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசிய மருத்துவ மாணவரும் தற்கொலை செய்துகொண்ட ஜெகதீஸ்வரனின் நண்பருமான பைசுத்தீனை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் குறிவைக்க தொடங்கி உள்ளார்கள்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து தமிழ்நாடு அரசு மற்றும் பல்வேறு அரசியல் குரல் கொடுத்து வரும் நிலையிலும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவ சீட் கிடைக்காததால் சென்னையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

மகனை இழந்த துயரம் தாங்க முடியாமல் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டது தமிழ்நாட்டையே உலுக்கி இருக்கிறது. இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாசுத்தீன் செய்தியாளர் சந்திப்பில் உள்ளம் உருக அளித்த பேட்டி பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்து வரும் ஃபயாஸ்தீன், "நான் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் தான் பெற்றேன். என் தந்தைக்கு வசதி இருந்த காரணத்தால் ரூ.25 லட்சம் பணம் கட்டி அவர் என்னை ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்து உள்ளார். ஆனால், என் நண்பன் ஜெகதீஸ் என்னைவிட நன்றாகப் படிப்பான்.
ஆனால், அவனுக்கு பணமில்லாத காரணத்தால் அவனுக்கு மருத்துவ சீட் கிடைக்காமல் போனது. 400 மதிப்பெண் எடுத்த என் நண்பனால் மருத்துவராக முடியவில்லை. பணம் இருப்பவன்தான் மருத்துவராக முடியும் என்றால் மருத்துவர் ஆனதும் அவர் போட்ட பணத்தை எடுக்க நினைப்பானா? அல்லது மக்களுக்கு சேவை செய்வானா?
எதற்கு இந்த நீட் தேர்வு? இதை வைத்து இந்த மத்திய அரசு என்னதான் சாதிக்கப்போகிறது? மக்கள் பணி செய்யவே ஜெகதீசன் மருத்துவராக நினைத்து நீட் எழுதினான். 2 ஆண்டுகள் தேர்வு எழுதி சீட் கிடைக்கவில்லை. 3 வது தடவை அப்பாவுக்காக மருத்துவராக வேண்டும் என்று தேர்வு எழுதினார்.

மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என ஜெகதீஸ் நினைத்தான். ஆனால் 400 மார்க் எடுத்தும் மருத்துவர் ஆக முடியவில்லை என்று அந்த மாணவர் வேதனை தெரிவித்தார். ஒரு கோடி செலவழித்து மருத்துவம் படிக்க வேண்டிய நிலை உள்ளது. எல்லாவற்றுக்கும் நுழைவுத் தேர்வு என்றால் 12 ஆம் வகுப்பு தேர்வு எதற்கு? இந்த ஆண்டு நீட்டில் முதல் மதிப்பெண் பெற்ற பிரபஞ்சன் தமிழன் என்பதில் பெருமைப்பட எதுவும் இல்லை. அவர் 15 லட்சம் செலவு செய்து படித்து உள்ளார்." என்று ஆவேசமாக பேசினார்.
நீட் தேர்வுக்கு எதிராக மருத்துவ மாணவர் ஃபயாஸ்தீனின் இந்த பேச்சு பலரால் பகிரப்பட்ட நிலையில், அவரை குறிவைத்து வலதுசாரிகள் சமூக வலைதளங்களில் கருத்திட்டு வருகிறார்கள். ஊடகங்களில் வெளியான அவரது பேட்டிகளுக்கு கீழே மோசமாக கருத்திட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி அவரது ஒரு கோடி செலவு செய்து படிக்கும் மாணவர் ஃபயாசுத்தீனின் தந்தையின் வருமானத்தை வருமான வரித்துறை பார்க்க வேண்டும் என்று வலதுசாரிகள் பதிவிட்டு வருகிறார்கள்.
மற்றொரு நபர் மிகக்குறைவாக நீட்டில் மதிப்பெண் பெற்ற ஃபயாசுதீனுக்கு மருத்துவம் படிக்க தகுதியில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காக வழங்கப்படும் இடஒதுக்கீட்டையும் குறிப்பிட்டு அவரை விமர்சித்து வருகிறார்கள். அதே சமயம் ஃபயாசுதீனின் வீடியோவை பகிர்ந்து நண்பருக்காக துணிச்சலாக குரல் கொடுப்பதையும் பலர் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications