கர்நாடகா பாணியில் ஜாதிகளுக்கு குறி வைக்கும் பாஜக.. தேவேந்திர குல வேளாளரை தொடர்ந்து ஒக்கலிகா?
சென்னை: கர்நாடகா பாணியில் தமிழக சட்டசபை தேர்தலில் ஜாதி வாக்குகளை வளைப்பதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளுக்கு குறிவைத்து காய்நகர்த்தியது போல தற்போது பிற்படுத்தப்பட்ட ஜாதியினரான ஒக்கலிகா வாக்குகளுக்கு பாஜக குறிவைத்திருக்கிறது.
கர்நாடகாவில் ஒக்கலிகா ஜாதியினர் ஜேடிஎஸ் கட்சிக்கு கணிசமாக வாக்களித்து வந்தனர். இந்த வாக்கு வங்கியை வளைக்க பாஜக முயற்சித்து ஒக்கலிகா மடங்களின் படிகளில் ஏறிப் பார்த்தனர்.
ஆனால் ஒக்கலிகா ஜாதியை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவகுமார் கைது, காஃபிடே சித்தார்த்தா தற்கொலை ஆகிய சம்பவங்கள் பாஜகவை பரமவிரோதியாக்கிவிட்டன. இதனால் காங்கிரஸ் பக்கம் ஒக்கலிகா ஜாதி வாக்குகள் போயின. இதையடுத்து வேறுவழியே இல்லாமல் லிங்காயத்து ஜாதி வாக்குகளை தக்க வைத்துக் கொண்டது பாஜக.
10 நிமிடம் பேசிய மோடி
இதே பார்முலாவை தமிழக சட்டசபை தேர்தலில் கையில் எடுத்து பாஜக கணக்குப் போட்டு வருவதாகவே தெரிகிறது. 7 உட்பிரிவினை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 10 நிமிடங்களுக்கும் மேலாக தேவேந்திரகுல வேளாளர் பெருமையை பேசினார். இதனால் லம்ப்பாக அந்த ஜாதி வாக்குகள் அதிமுக- பாஜக அணிக்கு என உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
சிடி ரவி யார்?
இதற்கு அடுத்ததாக பிற்படுத்தப்பட்ட ஒக்கலிகா ஜாதி வாக்குகளுக்கு பாஜக குறி வைத்திருக்கிறது. தமிழக பாஜக பொறுப்பாளரான சிடி ரவி, கர்நாடகாவின் ஒக்கலிகா ஜாதியை சேர்ந்தவர். இந்துத்துவா வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கக் கூடிய வியூகங்களை வகுப்பதில் கில்லாடி என பெயரெடுத்தவர். டெல்லி பாஜக தலைவர்களுடன் நேரடியான தொடர்பில் இருப்பவர். கர்நாடகாவில் 3 முறை அமைச்சராக இருந்த நிலையில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக்கப்பட்டிருக்கிறார்.
ஒக்கலிகா ஜாதி நிகழ்ச்சி
இந்த நிலையில் கோவையில் வரும் 23-ந் தேதி ஒக்கலிகா ஜாதியினரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கர்நாடாகவை சேர்ந்த ஒக்கலிகா மடாதிபதி டாக்டர் நிர்மலானந்த நாத மகா ஸ்வாமி ஜி வருகை தருகிறார். அவரை வரவேற்கும் ஒக்கலிகா ஜாதி சங்கத்தின் நிகழ்ச்சி கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் ஒக்கலிகர் சங்க கெளரவ தலைவர் ஆறுமுகசாமியுடன் சிடி ரவியும் பங்கேற்கிறார். ஏற்கனவே தமிழகத்தில் முகாமிட்டு வேல் யாத்திரை, காவடி எடுப்பது என பல்வேறு நிகழ்ச்சிகளில் இடைவிடாமல் சிடி ரவி கலந்து கொண்டிருக்கிறார்.
தமிழக அரசியல்
இப்படியான பின்னணியில் ஒக்கலிகா ஜாதி சங்க நிகழ்ச்சியில் சிடி ரவி கலந்து கொள்வது, தேர்தல் அறுவடைக்காக இல்லாமல் வேறு எதுவாகவும் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் கர்நாடகா களநிலவரமும் தமிழக நிலவரமும் ஒன்றல்ல. தமிழகத்தில் திமுக, அதிமுக என பிரதான கட்சிகளில் எம்.எல்.ஏக்களாக ஒக்கலிகா ஜாதியை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். கம்பம் பகுதியில் ஒக்கலிகா ஜாதியை சேர்ந்தவர்களில் அதிமுகவில் எஸ்.டி.கே. ஜக்கையன் எனில் திமுகவில் கம்பம் ராமகிருஷ்ணன் என இரு பெரும் தலைகள் இருக்கின்றன; வேடசந்தூர் தொகுதியில் அதிமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி. பரமசிவம் எனில் திமுக வேட்பாளராக நிறுத்தப்படக் கூடியவராக எதிர்பார்க்கக் கூடியவராக காந்திராஜன். இருவரும் ஒக்கலிகா ஜாதியினர்.
வியூகம் எடுபடாது
இதே நிலைமைதான் கோவை, மேட்டுப்பாளையம் பகுதியிலும் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு கட்சிக்குதான் வாக்களிக்க வேண்டும் என ஒக்கலிகா ஜாதியினரை சொல்வதற்கு என்னதான் பாஜகவின் சிடி ரவி முயற்சித்தாலும் ஜாதி சங்கம் இறங்கிப் போகாது. மணல் தொழிலில் ஒருகாலத்தில் கோவை ஆறுமுகசாமி கொடி கட்டிப் பறந்த போது அதிமுகவுக்கு மிக நெருக்கமாக இருந்த காலத்தில் கூட இப்படியான ஒரு தேர்தல் முடிவை ஒக்கலிகா ஜாதி சங்கம் எடுத்தது இல்லை. இந்த வரலாறு தெரியாமல் சிடி ரவி தலையை கொடுத்து பார்க்கிறார். ஆனால் அம்மஞ்சல்லியும் தேறாது என்கிற பரிதாப முடிவு சிடி ரவிக்கு தேர்தலுக்கு பின்னர்தானே தெரியும்!