விலகிச் செல்லும் அதிமுக.. துண்டை போட துடிக்கும் பாஜக - “அந்த” இடத்துக்கு குறி! இது வங்காள மாடல்
சென்னை: எதிர்க்கட்சியான அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், தமிழ்நாட்டில் தங்களை எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்ளும் பணிகளில் பாஜக தீவிரமாக இறங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையே எதிர்க்கட்சித் தலைவர்போல் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதாக பேச்சு அடிபட்டு வருகிறது.
யாருக்கு அதிமுக சொந்தம் என்ற போட்டியின் காரணமாக உட்கட்சி விவகாரங்களில் கவனம் செலுத்தி வரும் அக்கட்சி, ஒரு முறையான எதிர்கட்சியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகவே காணப்படுகிறது

அண்ணாமலையின் நடவடிக்கை
மறுபக்கம் பாஜகவோ, 4 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்துக்கொண்டு தினசரி அரசுக்கு எதிரான அறிக்கைகள் வெளியிட்டு, போராட்டங்களை நடத்தி ஊடகங்கள் மற்றும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர்களின் ஊழல் விபரங்கள் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

நயினார் நாகேந்திரன்
இதுபோன்ற செயல்பாடுகளால் ஊடகங்களில் அதிமுக தொடர்பான செய்திகள் குறைந்து பாஜக குறித்த செய்திகள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன. எனவே பாஜக பிரதான எதிர்க்கட்சியாக கருதிக்கொள்வதை வெளிப்படையாகவும் அறிவித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதமே பாஜகவின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார். இது தொடர்பாக இரு கட்சிகளிடையே மோதல் போக்குகளும் எழுந்தன.

பொன்னையன் பேச்சு
கடந்த ஜூன் மாதம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், "தமிழ் மக்களின் பிரச்சனைக்காக தமிழ்நாடு பாஜக போராடவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடாமல் பாடுபடுவோம் என்று கூறிக்கொண்டிருக்கும் பாஜகவின் கூற்றுகளை, உண்மை நிலையை கண்டறிய வேண்டும். அதை மக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் சொல்ல வேண்டும். உண்மையிலேயே தமிழ்நாடு பாஜக மக்களுக்காக பாடுபடவில்லை என்பது நாடறிந்த உண்மை. இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டும்." என்றார்.

பாஜக எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என விமர்சித்தார். 4 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள பாஜகவே எதிர்க்கட்சியாக இருப்பதாகவும் கூறினார். அதேபோல் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணனும், பாஜகவினர் விமர்சித்தால் அதிமுக பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

எடப்பாடி கண்டனம்
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "48 ஆண்டுகளாக நான் அதிமுகவில் இருக்கிறேன். சட்டமன்றத்தில் நானும், ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு பேசுகிறோம் என்பது மக்களுக்கு தெரியும். பாஜக சட்டப்பேரவைத் தலைவர் எப்படி பேசுகிறார் என்றும் மக்களுக்கு தெரியும். வி.பி.துரைசாமி எந்த கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்தார் என்பதையும் மக்கள் அறிவார்கள். அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது." என்றார்.

அதிமுக மோதல்
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தையும் தன்னுடன் சேர்த்து ஒற்றுமையாக பேசிய எடப்பாடி பழனிசாமி, தற்போது ஓ.பன்னீர்செல்வத்தையே கட்சியிலிருந்தும் நீக்கவிட்டார். அதிமுகவின் உட்கட்சி மோதல்களும், பொதுக்குழு சர்ச்சைகளும் தேசிய செய்தியாகிவிட்டன. எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும் அவரால் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக பணியை செய்ய முடியவில்லை என்பதையே தொடர் நிகழ்வுகள் காட்டுகின்றன.

துண்டைபோட துடிக்கும் பாஜக
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட உடனே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அவருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று அண்ணாமலை நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இன்று நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரனோ திமுகவின் எதிர்கட்சி பாஜகதான் என்று கூறி இருக்கிறார்.

மேற்கு வங்க மாடல்
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமூல் காங்கிரஸ் என்ற இரு கட்சிகளிடையே அரசியலில் போட்டி அதிகரித்த சூழலில் மூன்றாவது இடத்திலிருந்த காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக, அடுத்து மார்க்சிஸ்ட், காங்கிரஸ், திரிணாமூல் ஆகிய கட்சியின் முக்கிய பிரமுகர்களை தனது கட்சியில் சேர்த்து பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. இதே ஃபார்முலாவில் சில மாற்றங்களுடன் தமிழ்நாட்டில் 2 வது இடத்துக்கு அடித்தளம்போட முயல்கிறது பாஜக.












Click it and Unblock the Notifications