பாஜக + டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் ஓபிஎஸ்.. கொதித்த ஓபிஆர்.. திடீரென எழுந்த அந்த சந்தேகம்!
சென்னை: பாஜக மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கூறினார்.. இந்நிலையில் பாஜக உடன் இணைந்து தேர்தலை சந்திக்க போகும் ஓபிஎஸ், எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது..
அதிமுகவில் இருந்து பிரிந்த ஓ பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார், இவர் தனது அணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தென்காசி மாவட்டம் இலஞ்சியில் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது,ஓபிஎஸ் கூறுகையில், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. நாங்கள் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை ஏற்படுத்தி தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைத்து கழகத்தை நடத்தி வந்தோம்.
இதேபோல் அதிமுக கட்சியின் விதிப்படி அமைப்பு ரீதியாக பல்வேறு பொறுப்புகளை ஏற்படுத்தி அதன் பட்டியலையும் அனுப்பி வைத்து கட்சியை நடத்தி வந்தோம். ஆனால் மெல்ல மெல்ல எடப்பாடி பழனிசாமி தனது சுய ரூபத்தை காட்டத் தொடங்கினார். ஒற்றைத் தலைமை வேண்டுமென்று அவரது ஆதரவாளர்களை பேச வைத்தார். இதனை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.
எனினும் எப்படி பணத்தை கொண்டு முதல்வர் ஆனாரோ அதேபோன்று பொதுச் செயலாளர் பதவியையும் கட்சியின் விதியை மீறி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் நான் ஒன்றை உறுதியாக தெரிவிக்கிறேன். அவர் பதவிக்கு வந்த பிறகு நடைபெற்ற 8 தேர்தல்களிலும் அதிமுக ஏன் தோல்வி அடைந்தது?, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக வரவேண்டும் என்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உங்களால் முதல்வர் ஆக முடிந்ததா?, தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் முதல்வர் ஆனீர்களா?. இன்று இந்த கட்சியை அதள பாதாளத்தில் கொண்டு போய் வீழச் செய்திருக்கிறீர்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் பாஜக அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. அவர்கள் கூட்டணியை அமைத்து தனது பக்கத்தில் வலது புறத்தில் அமர செய்தார்கள்.. ஆனால் ஒரே வாரத்தில் கூட்டணியில் இருந்து விலகி விட்டேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.. பாஜக உடன் கூட்டணியில் இருந்து எப்போது விலகினீர்களோ, அப்போது முதல் உங்களுக்கு சனி பிடித்து விட்டது. அந்த சனி உங்களை சும்மா விடாது. அந்த சனி எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் நகராது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா, டி.டி.வி. தினகரனுடன் இணைந்து நாம் தேர்தலை சந்திப்போம்" இவ்வாறு தொண்டர்களிடம் ஓ பன்னீர்செல்வம் பேசினார்.
டிடிவி தினகரன் பாஜக உடன் இணைந்து தேர்தலை சந்திக்க போவதாக கூறியுள்ள ஓபிஎஸ் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் இது தொடர்பாக பேசிய ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம் என்று கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு தான் தற்போது இரட்டை இலை சின்னம் தரப்படுகிறது..
இந்த விவகாரம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த சத்யன் அண்மையில் ட்விட்டரில் எழுப்பிய கேள்வியில், "ஏன் உங்கள் நண்பர்கள் உதயசூரியன் சின்னத்தை, தாமரைச் சின்னத்தை ஒதுக்கவில்லையா உங்களுக்கு(ஓபிஎஸ்),
மக்கள் பணி செய்ய நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்தில் இணைவதற்கு எத்தணிக்கலாம். கழகத்தின் அடிப்படைகளை உள்வாங்கிக்கொண்ட எதிர்முகாமைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் இணையலாம்.
ஆனால் நீங்கள் உட்பட இரட்டை இலைச்சின்னத்திற்கு எதிராக நின்று சூழ்ச்சி செய்த துரோகிகள், அரசியல் அனாதைகளாக ஆவது தான் சரித்திரம். திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு இரட்டை இலைக்கு எதிராக வாக்களித்த உங்களை கழகம் ஒருபோதும் மன்னிக்காது." என்று கூறினார்.
இதற்கு அண்மையில் பதில் அளித்த ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்தரநாத் குமார், தம்பி... சத்யன், கடந்த கால உண்மை வரலாற்றை மறைத்து.... வாய்க்கு வந்ததை உளரக்கூடாது... கழகத்திற்கும் தலைமைக்கும் உங்களின் துரோகம் மிகவும் நீளமானது... அதை பட்டியலிட இடம் போதாது...
உண்மையான 'இரட்டை இலை' என்பது புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் தான்... இன்று உங்களிடம் இருப்பது
'இருண்ட இலை'... யார் அரசியல் அனாதைகள் ஆவார்கள்? யார் தலைமையில் கழகத்திற்கு தரித்திரம் கிடைக்கும்?
யார் தலைமையில் கழகம் சரித்திரம் படைக்கும்? என்பது விரைவில்..." என்று ரவீந்திரநாத் கூறியிருந்தார்.இதன் காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இரட்டை இலை தங்களுக்கு உறுதியாக கிடைக்கும் என்று ஓபிஎஸ் நம்புகிறார் என்றாலும் களநிலை வேறாக உள்ளது. தற்போதைய நிலையில் ஓபிஎஸ் தனி கட்சியும் ஆரம்பிக்கவில்லை.. டிடிவி தினகரன் உடனும் சேரவில்லை.. எனவே எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்விகள் எழுகிறது. தாமரையில் அதிமுக அணியினர் போட்டியிடுவார்களா அல்லது அமமுக சின்னத்தில் போட்டியிடுவார்களா அல்லது சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவார்களா என்பது தேர்தல் சமயத்தில் தான் தெரிய வரும்..












Click it and Unblock the Notifications