விருந்து சாப்பிட்டவர்கள் வெளியேறி விட்டார்கள்.. கதவு திறந்து உள்ளது.. கூட்டணிக்கு அண்ணாமலை அழைப்பு
சென்னை : வீட்டின் கதவு திறந்துதான் உள்ளது, மோடி அனைவரையும் வரவேற்பார். இந்த வீட்டிற்கு விருந்தினர்கள் வரத்தான் செய்வார்கள் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து அதிமுக பலமுறை வெளிப்படையாக அறிவித்த பின்னர் புதிய கட்சிகள் கூட்டணியில் சேர அழைப்பு விடுத்துள்ளார் அண்ணாமலை.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதிமுக, திமுக போன்ற கட்சிகள் தீவிரமாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ஐடி அணி, இளைஞர் அணி என தனித்தனியாக கூட்டங்கள் நடத்தி வாக்காளர்களை கவர என்ன செய்ய வேண்டும் என்று வியூகம் வகுத்து வருகின்றனர்.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக 3வது முறையாக ஆட்சி அமைத்து ஹாட்ரிக் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிமுக உடனான பாஜக கூட்டணி முறிந்து விட்டது. அதிமுக தனித்து களமிறங்க தயாராகி வருகிறது. இந்த நிலையில்தான் சென்னை சோழிங்கநல்லூரில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர்கள் கூட்டம், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக சாடினார். குடும்ப ஆட்சி என்பது தமிழகத்தை மொத்தமாக சீரழித்துள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான நகரமான சென்னை, நம் கண்முன்னே அழிகிறது. இந்த லோக்சபா தேர்தல் சென்னை நகரை மாற்றக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அறிவாலயத்தில் ஒரு நிமிடத்தில் முடிவெடுத்து, அதை தொண்டர்களுக்கு இரண்டு நிமிடத்தில் சொல்லி, தொண்டர்கள் அதை மூன்று நிமிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். இப்படித்தான் அறிவாலயத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. காரணம், இங்கு ஒரு குடும்பம் மட்டும் ஆட்சியில் இருக்கிறது. ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை அவ்வாறு இல்லை. சின்னச் சின்ன பிரச்சினைகளின் ஊடே ஜனநாயகத்தை வளர்த்து கட்சியை வளர்ப்பதுதான் பாஜகவின் அழகே.
உலகிலேயே உண்மையான பரிபூரணமான தலையில் தொடங்கி கால் வரை முழுமையாக ஒரு ஜனநாயகம் இருக்கும் கட்சி பாஜகதான். அதனால், கட்சியிலும் இயற்கையாகவே பிரச்சினைகளும் அதிகமாகத்தான் இருக்கும். அண்ணாமலையால் கட்டளையிட முடியாது. அண்ணாமலையும் இந்தக் கட்சியில் ஒரு தொண்டன், ஒரு சேவகன் என்றார்.
அதிமுக உடனான கூட்டணி முறிவு குறித்து பேசிய அண்ணாமலை, வீடு நாம் கட்டியுள்ளோம், என்டிஏ கூட்டணி நமது வீடு போன்றது. எங்கள் வீட்டில் அவர்கள் இல்லை என நாம் ஏன் சொல்ல வேண்டும்? வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு அந்த வீட்டில் நாங்கள் இல்லை என கூறுகின்றனர்.
9 வருடமாக தங்கியிருந்தவர்கள் இப்போது வெளியே சென்றுள்ளனர். நம்முடைய வீட்டில் உணவருந்தியவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். நம் வீட்டில் உணவருந்தியவர்களை நாம் தவறாக பேச மாட்டோம்.
வீட்டின் கதவு திறந்துதான் உள்ளது, மோடி அனைவரையும் வரவேற்பார். இந்த வீட்டிற்கு விருந்தினர்கள் வரத்தான் செய்வார்கள். லோக்சபா தேர்தலில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம். அவர்கள் என்ன சொன்னாலும் பலம் நமது பக்கம் இருக்கிறது, மக்கள் நம் பக்கம் இருக்கின்றனர் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications