25 நாள் டைம்.. இல்லைனா 60 மாவட்டங்களில் செக்.. திமுகவை விடாத அண்ணாமலை.. பாஜக விதித்த கெடு!
சென்னை: திமுக அரசு இன்னும் 25 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுக்க போராட்டங்களை நடத்துவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேற்று பாஜக சார்பாக சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த மே 21ம் தேதி நாடு முழுக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.
இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக இன்று போராட்டம் நடத்தியது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கி பாஜக சார்பாக பேரணி நடத்தப்பட்டது. பாஜக தொண்டர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அண்ணாமலை
இந்த நிலையில் நேற்று நடந்த போராட்டத்தை போலவே தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதில், திமுக அரசின் மக்கள் விரோத போக்கை முறியடிக்கக் கோட்டையை நோக்கிய நமது பயணத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெள்ளமாகத் திரண்டு வந்த நம் கட்சி தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் சார்பாக எங்களது நன்றிகள்.

வாக்குறுதி
வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றியைப் பெற்றுவிட்டு இன்று வீணாக சப்பை கட்டுக் கட்டுவதை இந்த அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். பெட்ரோல் விலையை 2₹, டீசல் விலையை 4₹ மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100₹ மானியம் ஆகிய தேர்தல் வாக்குறுதியில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஒரு வருடத்திற்குள் பெட்ரோல் விலையை 14.5 ரூபாயும் டீசல் விலையை 17 ரூபாயும் குறைத்துள்ளது.

திமுக அறிக்கை
இதன் பின்னும் திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் இம்மாதம் 25ஆம் தேதி அனைத்து மாவட்டத்திலும் ஒரு நாள் சத்தியாகிரக போராட்டத்தில் பாஜகவின் அனைத்து தொண்டர்களும் ஈடுபடுவர். பாஜகவின் 60 அமைப்பு சார் மாவட்டங்களிலும் போராட்டம் நடக்கும். அதற்குப் பின் திருச்சியில் மாபெரும் போராட்டத்தில் எங்களது தொண்டர்கள் திரளாகப் பங்கேற்பர். இந்த மாபெரும் போராட்டம் திமுகவின் முடிவுரைக்கு ஆரம்பமாக இருக்கும், என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications