பாஜக 120 சீட்டு தேறாது! காலை வாரிய உபி,பீகார்? மோடிக்கு 6 மாநிலங்களில் செக்!
சென்னை: பாஜக 120 சீட்டுகளைத் தாண்டாது என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் தேதி வருகின்ற 10க்குள் அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை மனதில் வைத்து பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பம்பரமாகச் சுற்றிப் பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

தமிழ்நாட்டை மோடி அரசு வஞ்சிக்கிறது என்று திமுக பிரச்சாரம் செய்து வரும் சூழலில், அடிக்கடி பிரதமர் மோடி தமிழ்நாட்டுப் பக்கம் தலை வைக்கத் தொடங்கி உள்ளார்.
தமிழக பயணத்தின் போது அவர், மிகக் கடுமையாக திமுக ஆட்சியைத் தாக்கிப் பேசி வருகிறார். இந்தத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார் பிரதமர் மோடி.
அதை மனதில் வைத்துத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியான உடனே பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

அதைப் பார்த்து, முதல்வர் ஸ்டாலின் 'பிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பாஜக வருகின்ற தேர்தலில் 120 தொகுதிகளைத் தாண்டாது என்று கணித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். அது எப்படி? அந்தளவுக்கு பாஜகவின் செல்வாக்கு குறைந்துவிட்டதா?
அது பற்றி தராசு ஷ்யாம், "முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என்கிறார். அது உண்மை. அவரது முகத்தில் அந்தப் பயம் தெரிகிறது. குறிப்பாக டெல்லியில் 7 இடங்களிலும் பாஜக தோற்று விடும். அதற்கான எடுத்துக்காட்டு என்ன என்று சொல்கிறேன்.

பாஜக அறிவித்த வேட்பாளர்கள் நாங்கள் போட்டியிடப் போவதில்லை என்று பின்வாங்குகிறார்கள். நாட்டில் மிகப்பெரிய ஆளும் கட்சியில் வேட்பாளராக அறிவிக்கப்படுவதே பெரிய விசயம்.
ஆனால், இங்கே என்ன நடந்துள்ளது? வேட்பாளராக அறிவித்த பிறகு 5 பேர், நாங்கள் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்பட்ட போஜ்புரி பாடகர் பவன் சிங் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் என்னைப் போல் பலர் விலகுவார்கள் என்றும் பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த சம்பவங்கள் எதைக் காட்டுகின்றன? பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என்று ஸ்டாலின் இதை வைத்து தான் சொல்லி இருக்கிறார். நாம் அப்படித்தான் யூகிக்க முடியும்.
மொத்தத்தில் பாஜக கடந்த முறை 300 இடங்களைப் பெற்றது. இந்த 300 தொகுதிகளில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு 6 அல்லது 7 மாநிலங்களில் தான் உள்ளது. இதில் உபி மற்றும் பீகார் பற்றி பலரும் அறிவார்கள். இந்த இரண்டையும் சேர்த்து 120 தொகுதிகள்.
இரண்டு நாள்கள் முன்னால் பீகாரில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான இந்தப் பேரணி மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது. அங்கே பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் பற்றி பேச்சே இல்லை. அந்தப் பேரணியில் பேசிய லாலு பிரசாத் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? மோடி இந்துவே இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு ஒரு காரணம் சொல்லி இருக்கிறார் லாலு. ஒரு இந்துவின் தாய் இறந்துவிட்டார் மொட்டை அடிப்பார்கள். அப்படிப் பார்த்தால் மோடியின் தாயார் மறைந்த போது அவர் மொட்டை அடித்துக் கொள்ளவே இல்லை. ஆகவே, மோடி இந்துவே இல்லை என்கிறார் லாலு.
இந்துக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் மோடி, இந்து சம்பிரதாயங்களை உண்மையாகக் கடைப்பிடிக்கவில்லை என்று அவர் சொல்லி வருகிறார். மோடிக்கு எதிராகக் கூட்டப்பட்ட இந்தக் கூட்டணியில் 15 லட்சம் பேர் திரண்டுள்ளனர்.
உபியும் பீகாரும் இந்திய அரசியலின் மையப்புள்ளி. இன்றைக்குப் பீகாரில் உள்ள 25 தொகுதிக்கு வேட்பாளரே அறிவிக்க முடியவில்லை. இங்கு 100 சீட்டு அறிவித்துள்ளார்கள். அதில் இன்னும் 29 சீட்டு உபியில் பாக்கி உள்ளது.

காசியாபாத்தில் வி.கே. சிங். அவர் இப்போது மத்திய அமைச்சராக உள்ளார். மேனகா காந்தி, சுல்தான்புரியில் நிற்கிறார். வருண் காந்தி, பிலிபித் தொகுதியில் நிற்கிறார். பல இடங்களில் சீட்டு ஒதுக்குவதில் பனிப்போர் நீடிக்கிறது.
உபியில் பாஜகவுடன் மிகப்பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணியில் இல்லை. அதேபோல் பீகாரிலும். அப்படி இருந்து ஏன் வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லை என்றால், பாஜகவிற்குள் உள்ள உட்கட்சி பூசல்தான் காரணம்.
அதாவது பீகார், உபி, டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்த்தால் மொத்தம் 127 தொகுதிகள். அதில் பாஜக 100 இடங்களில் தோல்வியடையும் என்பதுதான் இன்றைக்குக் களத்தில் உள்ள யதார்த்த நிலை.

ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய அன்றே பாஜகவின் கதை முடிந்துவிட்டது.
நிலைமை இப்படி உள்ளபோது பிரதமர் மோடி 350 சீட்டுகளில் வெற்றிபெறுவோம் என்கிறார். உண்மையில் பார்த்தால் 120 சீட்டுகளில் வெல்வதற்குக்கூட வாய்ப்பு இல்லை என்பதுபோல்தான் கள நிலவரம் உள்ளது.
அப்படியே இந்திய வரைபடத்தின் கீழே உள்ள மாநிலங்களுக்கு வருவோம். ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக 20 சீட்டுக்களை கூட வெல்ல முடியாது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்தார்.

அந்தக் கட்சியை உடைத்து ஒருவரை பாஜக பக்கம் கொண்டுவந்துவிட்டார்கள். ஆகவே, அங்கே இருந்த ஆதரவை பாஜக இழந்துள்ளது. ஒடிசாவில் தெலங்கானாவைப் போல் காங்கிரஸ் பலம் பெற்று வருகிறது.
ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் பாஜக 120 முதல் 150 இடங்களைக் கூட தாண்ட முடியாது என்றே தோன்றுகிறது" என்கிறார்.
இவர் சொல்வதைப்போல் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் மோடி அரசுக்கு எதிராக சவுத் டேக்ஸ் மூமெண்ட் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தி உள்ளன. அது பாஜகவுக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது உறுதி என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications