7 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்.. 4ல் வெற்றிபெற்ற பாஜக.. தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
சென்னை: 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் மாநில கட்சிகள் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன. இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜகவுக்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்று அக்கட்சி ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளில் கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. இந்த 7 சட்டசபை தொகுதிகளின் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இதில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற மாநிலங்களான பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநில இடைத் தேர்தல் முடிவுகள் மீது மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டன. அதேபோல் தெலங்கானாவில் டிஆர்எஸ் - பாஜக இடையிலான நேரடி போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
காசி சங்கமம் சர்ச்சை: கூவி அழைக்கும் பாஜக தலைகள்! யார் அப்பன் வீட்டுப் பணம்? கொந்தளிக்கும் கி.வீரமணி
தெலங்கானா நிலவரம்
தெலங்கானா மாநிலம் முனுகோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகோபால் ரெட்டி, பாஜகவில் இணைந்தார். இதனால் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் பாஜக. சார்பாகவே ராஜகோபால் நிறுத்தப்பட்டார். டிஆர்எஸ் கட்சி சார்பாக கூசுகுண்ட்லா பிரபாகர் ரெட்டி நிறுத்தப்பட்டார். இதில் பாஜக வேட்பாளரை டிஆர்எஸ் கட்சி வேட்பாளர் கூசுகுண்ட்லா பிரபாகர் ரெட்டி 9 ஆயிரத்து 146 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பீகார் நிலவரம்
அதேபோல் பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அங்கு நடத்தப்பட்ட 2 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் முக்கியத்துவம் பெற்றன. மோகாமா தொகுதியில் லாலுவின் ஆர்ஜேடி முன்னாள் எம்எல்ஏ ஆனந்த் சிங் கின் மனைவி நீலம் தேவி, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டார். அவர் 16, 741 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
பாஜக வெற்றி
ஆனால் கோபால்கஞ்சில் பாஜக எம்எல்ஏ சுபாஷ் சிங் மரணத்தால் நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக சார்பில் களம் இறங்கிய மறைந்த எம்எல்ஏ-வின் மனைவி குசும் தேவி வெற்றி பெற்றார். இவர் ஆர்ஜேடி வேட்பாளர் மோகன் குப்தாவை 1,794 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதனால் பாஜக வெற்றிபெற்ற தொகுதியை, மீண்டும் தக்கவைத்தது.
கைஓங்கிய சிவசேனா
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சியை இழந்ததோடு, கட்சியும் பிளவுபட்டதால் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் போட்டியில் இருந்து பாஜக கடைசி நேரத்தில் விலகியதால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ருதுஜா லட்கே 66 ஆயிரத்து 530 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார்.
உபி முடிவு என்ன?
உத்தரபிரதேச மாநிலம், கோலகோகர்நாத் தொகுதியில் பாஜக அமான் கிரி 34,298 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட சமாஜ்வாடி கட்சி வினய் திவாரி தோல்வியைத் தழுவினார். ஹரியானா மாநிலத்தில் ஆதம்பூர் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய் பாஜகவுக்கு தாவினார். இங்கு அவரது மகன் பாவ்யா பிஷ்னோய் பாஜக சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
ஒடிசா இடைத்தேர்தல்
ஒடிசாவில் பாஜக எம்எல்ஏ பிஷ்ணு சேதி மரணம் அடைந்ததால், தாம்நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அவரது மகன் சூரிய வன்ஷி சூரஜ் பாஜக.சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தனக்கு அடுத்தபடியாக வந்த பிஜூ ஜனதாதளம் வேட்பாளர் அபந்தி தாசை 9 ,881 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மாநில கட்சிகள் 3ல் வெற்றி
இவ்வாறு 7 தொகுதிகளில் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளில் ஆர்ஜேடி, சிவசேனா மற்றும் டிஆர்எஸ் ஆகிய கட்சிகள் தலா 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன. இந்த இடைத்தேர்தலில் பெரும்பாலும் அந்தந்த தொகுதிகளில் ஏற்கனவே வெற்றிபெற்றிருந்த கட்சிகளே மீண்டும் வெற்றியை பெற்றுள்ளன.
4 ல் பாஜக வெற்றி
ஆனால் மகாராஷ்டிராவில் பாஜக போட்டியில் இருந்து விலகியதன் மூலம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மீண்டும் பலம்பெற்றுள்ளது. பீகாரில் ஆட்சி மாற்றம் நடந்தாலும் இரு தொகுதியிலும் நிதீஷ் குமார் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. ஆனால் தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சிக்கு ஓரளவிற்கு பாஜக வேட்பாளர் சவால் கொடுத்துள்ளார்.
பாஜக பதிலடி
அதுமட்டுமல்லாமல் பெரும்பாலும் எம்எல்ஏ-க்கள் மரணமடைந்த தொகுதிகளில் அவர்களின் மனைவி போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். இதனால் பாஜகவுக்கு பெரிய சறுக்கல் இல்லை என்றே பார்க்கப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் எங்கும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாட்டில் பாஜகவுக்கு எதிரான நிலை நிலவி வருவதாக எதிர்க்கட்சிகள் பேசிய பேச்சுகளுக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளதாக பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக இதுபோல் மீண்டும் வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.