பாஜக 350 இடங்களில் வெல்லும்.. தமிழ்நாட்டிலும் மலரும் தாமரை.. பிரபல பொருளாதார நிபுணர் சொல்வதை பாருங்க
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனித்தே 330 - 350 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தமிழ்நாட்டில் 5 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் பிரபல பொருளாதார நிபுணரான சுர்ஜித் பல்லா கணித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்னும் 6 கட்ட தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. வரும் 26 ஆம் தேதி கேரளா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 84 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. கடைசி கட்ட மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், பிற மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்தே 350 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தமிழ்நாட்டில் 5 இடங்களில் வெல்லும் என்று பிரபல பொருளாதார நிபுணரான சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.
350 இடங்களில் பாஜக: பிரபல ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் சுர்ஜித் பல்லா இந்த தகவலை கூறியுள்ளார். சுர்ஜித் பல்லா கூறியதாவது:- புள்ளி விவர சாத்தியக் கூறுகளின் அடிப்படையில், பாஜக 330 - 350 இடங்கள் வரை தனித்தே வெற்றி பெறும். பாஜக மட்டுமே இத்தனை இடங்களில் வெற்றி பெறும். கூட்டணி கட்சிகளையும் சேர்த்து அல்ல.
5 - 7 சீட்கள் உயரும்: கடந்த 2019 ஆம் ஆண்டு ஒப்பிடும் போது 5 முதல் 7 சதவிகிதம் சீட்களின் எண்ணிக்கை உயரலாம். எதிர்க்கட்சியான காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெறலாம். 2014 தேர்தலுடன் ஒப்பிடும் போது இது 2 சதவிகிதம் குறைவு ஆகும். எதிர்க்கட்சியின் பிரச்சினை என்னவென்றால் கூட்டணியும் அதன் தலைமையும் தான். பொருளாதார விவகாரம் அதிகம்.. தலைமை விவகாரம் இரண்டாவது..
தமிழ்நாட்டில் 5 இடங்கள்: இந்த இரண்டுமே பாஜகவிற்கு சாதகமாக உள்ளது. பெரும் அளவு மக்களை கவரும் விதமாக ஒரே ஒரு தலைவரை எதிர்க்கட்சி தேர்ந்து எடுத்து இருக்குமானால் போட்டி இருந்து இருக்கும் என நான் கருதுகிறேன். தொடர்ந்து பலவீனமாக இருக்கும் தமிழ்நாட்டில் கூட பாஜக 5 இடங்களில் வெற்றி பெறும்.
கேரளாவில் எத்தனை?: அதையும் தாண்டினால் கூட நான் ஆச்சர்யப்பட மாட்டேன். கேரளாவில் ஒன்றிரண்டு இடங்களில் வரலாம். மக்களின் வாழ்க்கை தரம் எப்படி உயர்ந்து இருக்கிறது என்ற அடிப்படையில் தான் இந்தியாவில் மக்கள் வாக்களிக்கிறார்கள். இதுதான் அடிப்படையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications