தமிழகம்: இந்த 3 தொகுதிகளில் வெற்றி உறுதி- அவரு தோற்பாரா? டெல்லிக்கு போன பாஜகவின் ரகசிய சர்வே!
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தென்சென்னை உள்ளிட்ட 3 தொகுதிகளில் உறுதியாக வெல்லும் என அக்கட்சி களமிறக்கிய டீம் நடத்திய சர்வே ரிப்போர்ட் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். இந்த சர்வே முடிவுகள்தான் இப்போது தமிழ்நாடு பாஜகவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 19 வேட்பாளர்களை அறிவித்தது. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் பாஜக ஒரு சில இடங்களையாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் சீனியர்கள் பலரையும் களமிறக்கியது. கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் களமிறக்கிவிடப்பட்டனர். பாஜகவினர் சீனியர்கள் போட்டியிடும் சில தொகுதிகளில் வலிமையான போட்டியாளர்களும் இல்லாத சூழ்நிலையும் உள்ளது.
இந்த நிலையில் தென்னிந்தியாவில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பாஜக மேலிடமே ஒரு சர்வே நடத்தியிருக்கிறது. இந்த சர்வே முடிவுகளில் பாஜக நினைத்தபடியே தமிழ்நாட்டில் சில இடங்களைக் கைப்பற்றும் சாத்தியம் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். தமிழ்நாட்டில் தென் சென்னை (தமிழிசை சவுந்தரராஜன்), கோவை ( அண்ணாமலை), கன்னியாகுமரி (பொன் ராதாகிருஷ்ணன்) ஆகிய தொகுதிகளில் பாஜக வெல்லக் கூடும் என நம்பிக்கையாக கூறப்பட்டுள்ளதாம்.
தென் சென்னையில் தமிழிசை சவுந்தராஜனுக்கு எதிராக திமுகவின் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மோதுகிறார். கோவையில் அண்ணாமலையுடன் திமுகவின் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் களம் காண்கின்றனர். கன்னியாகுமரியில் காங்கிரஸின் சிட்டிங் எம்பி விஜய் வசந்த், மூத்த பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்கொள்கிறார்.
திருநெல்வேலி தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெல்வார் எனக் கூறப்பட்டாலும் அதிமுக- திமுக- காங்கிரஸ் கட்சியின் கணிசமான வாக்கு வங்கி அவருக்கு பின்னடைவைத் தரக் கூடும் எனவும் அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். நீலகிரியில் என்னதான் மத்திய அமைச்சர் எல்.முருகன் களமிறக்கப்பட்டாலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என்கிறதாம் அந்த சர்வே முடிவு.
கேரளாவில் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக வெல்லும் வாய்ப்பிருக்கிறதாம். திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸின் சசி தரூர், பாஜகவின் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மோதுகின்றனர். இத்தொகுதியில்தான் பாஜக வெல்லும் வாய்ப்பிருக்கிறதாம்.
கர்நாடகாவில் பாஜகவில் உட்கட்சி மோதல்கள் இருந்தாலும் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 15 இடங்களை அக்கட்சி கைப்பற்றும் சாத்தியம் இருக்கிறதாம். பாஜகவின் உட்கட்சி மோதல்களால் சில தொகுதிகளில் காங்கிரஸுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகிறது என்கிறதாம் இந்த சர்வே முடிவுகள்.












Click it and Unblock the Notifications