கையில் என்ன ‛வாரியல்’.. சென்னை ஆதிகேசவ பெருமாள் கோவிலை சுத்தம் செய்த குஷ்பு.. மோடியின் ‛காப்பி’
சென்னை: பாஜக சார்பில் 4 நாட்களுக்கு 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும் என அதன் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், இன்று சென்னை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தூய்மைப் பணியில் குஷ்பு ஈடுப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கோவிலை சுத்தம் செய்துள்ளனர்.
மேலும் இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ம் தேதி பல்வேறு மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், பாஜக சார்பில் வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில், அயோத்தி ராமருடைய குலதெய்வ கோயிலான ஸ்ரீரங்கத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி குடும்பத்துடன் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
"அயோத்தியில் வரும் ஜனவரி 22 அன்று, பகவான் ஶ்ரீராமரின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்ய அறிவுறுத்தியதை அடுத்து, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலில், பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டோம்.
மேலும், இன்று முதல் வரும் 22ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு, பாஜக சார்பாக, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். பாஜக சகோதர சகோதரிகள் இந்த இறைபணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
எனவே பாஜகவினர் வழிபாட்டுத் தலங்களை தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கினர். இன்று சென்னை ஆதிகேசவ பெருமாள் கோயிலில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அதேபோல தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அனுமான் கோயிலில் அம்மாநில ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தூய்மை பணியில் ஈடுபட்டார்.












Click it and Unblock the Notifications