ஆஹா.. புது ரூட்டை பிடித்து.. "அவங்க" வாக்கு வங்கியை.. அப்படியே கபளீகரம் செய்ய முயலும் பாஜக
பாஜக, சௌராஷ்டிர மக்களின் வாக்குகளை பெற முயல்கிறது
சென்னை: மதுரைக்குப் போன பிரதமர் மோடி அங்கு போய் செளராஷ்டிர சமூகத்தினர் குறித்து பேசியுள்ளதை சாதாரணமாக கடந்து போய் விட முடியாது. மதுரை வாக்கு வங்கிகளில் முக்கியமானது இந்த செளராஷ்டிர வாக்கு வங்கி.
மதுரையைப் பொறுத்தவரை பல்வேறு சமூகத்தினர் கலந்து வாழும் ஒரு பெருநகரமாகும். பெரிய கிராமம் என்று சொன்னாலும் கூட பல்வேறு சமூகத்தினரும் இணக்கமாக வாழும் ஒரு நகரம்தான் மதுரை.
முக்குலத்தோர் வாக்கு வங்கி ஒரு பக்கம் வலுவாக இருக்கும். நாடார் சமூகத்தினர் இன்னொரு பக்கம் இருப்பார்கள். தெலுங்கு பேசும் நாயுடு சமூகத்தினர் ஒரு பக்கம் இருப்பார்கள். மறுபக்கம் இஸ்லாமியர்கள் வாக்கு வங்கியும் இங்கு பலமாக உள்ளது.
சௌராஷ்டிரா மக்கள்
இப்படிப்பட்ட வாக்கு வங்கிகளில் ஒன்றாக திகழ்வதுதான் செளராஷ்டிர வாக்கு வங்கி. செளராஷ்டிரர்களின் பூர்வீகம் குஜராத் ஆகும். இவர்களின் வாக்கு வங்கி என்பது பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கானது. காங்கிரஸ் கட்சிக்குத்தான் இவர்கள் காலம் காலமாக வாக்களித்து வருகின்றனர். செளராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவரான ஏஜி சுப்புராமன் இவர்களின் ஏகோபித்த தலைவராக ஒரு காலத்தில் திகழ்ந்தார். எம்பியாகவும் இருந்தார்.
சுப்புராமன்
சுப்புராமனுக்குப் பிறகு அவரது மகன் ஏஜிஎஸ் ராம்பாபு பல காலத்திற்கு காங்கிரஸ் எம்பியாக இருந்தார். தமாகா சார்பிலும் எம்பியாக இருந்துள்ளார். செளராஷ்டிர வாக்கு வங்கியானது மதுரையின் முக்கிய வாக்கு வங்கி என்பது மட்டுமல்லாமல் மதுரை கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவும் இருந்து வருகிறது.
காங்கிரஸ்
பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வந்த இவர்களை இப்போது பாஜக தன் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக தெரிகிறது. இந்த முயற்சிகள் இப்போது இல்லை, மோடி பிரதமரானதுமே தொடங்கி விட்டது. மோடி குஜராத் என்பதால் இவர்களின் வாக்கு வங்கியையும் அப்படியே பாஜக பக்கம் திருப்ப மதுரை பாஜகவினர் நீண்ட காலமாகவே வேலை பார்த்து வருகின்றனர்.
மோடி
இன்று மதுரை வந்த பிரதமர் மோடியும், செளராஷ்டிர மக்களை மதுரை மக்கள் ஏற்றுக் கொண்டது குறித்து பெருமிதமாக பேசியுள்ளது முக்கியமானது. இதன் மூலம் செளராஷ்டிர வாக்குகளை அப்படியே லம்ப்பாக கவரும் முயற்சியில் பாஜக இறங்கி விட்டதோ என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் தரப்பும், திமுகவும் இதற்கு என்ன செய்யப் போகின்றன என்பதும் இன்னொரு கேள்வியாகும்.
பிரதமர்
அன்றே சொன்னார்கள், சின்ன சின்னதாக வாக்கு வங்கிகளை திரட்டி பெரிய வாக்கு வங்கியாக மாற்றும் வேலையைத்தான் பாஜக செய்து வருகிறது என்று... இப்போது அதை நிரூபிப்பது போல பிரதமரே செளராஷ்டிரர்கள் குறித்து பேசியுள்ளார். பார்க்கலாம், செளராஷ்டிர மக்கள் சொந்த மாநில பாசத்தை காட்ட போகிறார்களா அல்லது மதுரைக்கு விசுவாசமாக இருக்கப் போகிறார்களா என்பதை.