”மின்கட்டண உயர்வு தமிழகத்தின் கருப்பு நாள்” செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்யனும்.. அண்ணாமலை பரபர!
சென்னை: மின்கட்டண உயர்வு தமிழகத்தின் கருப்பு நாள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு அமமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு கருப்பு நாளாகும். மக்கள் போராட்டம் நடத்தினாலும், மின் கட்டணத்தை உயர்த்துவேன் என்று "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" தமிழக அரசு, அமைச்சரும் செயல்பட்டு வருகின்றனர்.

கருப்பு நாள்
தமிழக அரசு என்ன செய்தாலும் மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரை வேறு வழியில்லை. மின் கட்டண உயர்வு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஏற்கனவே கூறியது போல் சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக டிஎன்இபி-யை நடத்தி வருகிறார்கள். இதற்கான பதிலடி மக்களால் நாடாளுமன்றத் தேர்தலில் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு
இதனைத்தொடர்ந்து, பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட பண மோசடி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
அந்த தீர்ப்பில், மாநில அரசுக்கும், அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக அரசுப் பணியில் உள்ள அமைச்சர் தான் பணம் வாங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளார். அதேபோல் பணம் கொடுத்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். பணம் வாங்கிக் கொடுத்ததாக இடைத்தரகரும் ஒப்புக் கொண்டுள்ளார். இதைக் கடந்து என்ன ஆதாரம் தேவை.

பதவி நீக்கம்
அதனால் இந்த தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதனால் தான் ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உள்ளோம். அதேபோல் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் பாஜகவையும் ஒரு தரப்பாக இணைக்க மனுதாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications