“கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் நிலைபெற வேண்டும்” - CPI கட்சி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை: "கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு. மனிதர்கள் எல்லோருக்கும் ஏற்பட வேண்டிய உணர்வு" என இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது நமது இலக்கு. கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் நிலைபெற வேண்டும்" என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு, மனிதர்கள் எல்லோருக்குள்ளும் உருவாக வேண்டிய உணர்வு. அந்த உணர்வுக்கு அரசியல் வடிவம் கொடுத்து, செங்கொடியை ஏந்தி, உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய உங்கள் உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை.

இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்ட தோழர் ஐயா நல்லகண்ணு, இன்று நூற்றாண்டைக் கடந்திருக்கிறார். இது எந்த இயக்கத்திலும் இல்லாத ஒரு மிகப்பெரிய சாதனை. திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடைமை இயக்கத்திற்கும் ஒரே இலக்கு தான்.'எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்' என்பதுதான் இலக்கு. அதனால்தான் திராவிட இயக்கக் கொடிகளில் 'சிவப்பு' இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகக் கொடியிலும் சரிபாதி சிவப்பு இருக்கிறது.
நம் ஒற்றுமைதான் இந்திய நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஒற்றுமை. கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய கொள்கைகள் இங்கே நிலைபெற வேண்டும். அதிகமான உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நமக்குள்ளே இருக்கக்கூடிய நட்பு, தேர்தல் அரசியலைக் கடந்த நட்பு. சாதியவாதம், வகுப்புவாதம், பெரும்பான்மை வாதம், எதேச்சதிகார வாதம் என மக்களை ஒடுக்க நினைக்கக்கூடிய அத்தனைக்கும் எதிராக, ஜனநாயக சக்திகள் ஒற்றுமையோடு ஓரணியில் நின்று பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான தோழமைதான் நம்முடைய தோழமை.
நான் உறுதியாகச் சொல்கிறேன், இந்தத் தோழமைதான், பாசிசம், எதேச்சதிகாரம், மதவாதம், சர்வாதிகாரம் என அனைத்தையும் வீழ்த்தும். நமது இந்திய நாட்டையும், தன்மானமிக்க தமிழ்நாட்டையும் காக்க, உயர்ந்த எண்ணத்தை இலட்சியமாகக் கொண்டு அமைந்திருக்கக்கூடிய கூட்டணி இது.
பாஜக தன் அதிகாரக் கரங்களை எல்லாப் பக்கமும் நீட்டி, இந்திய நாடு இதுவரை காப்பாற்றி வைத்திருந்த அனைத்து விழுமியங்களையும் சிதைக்கின்ற வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளைத் தங்களுக்கு ஏற்றவாறு சிதைக்க நினைக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து, 'ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி' என மாற்ற நினைக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க.-வின் இந்த 'டப்பா எஞ்சின்' ஆட்டத்திற்கு இங்கே வேலையே கிடையாது. மக்களுடன் இணைந்து நம்முடைய பயணத்தைத் தொடர்வோம். வெல்வோம் ஒன்றாக" எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications