பேப்பர் பையில் ”பாம்”.. சென்னை சாலையில் வெடித்ததால் பதற்றம் - அசால்டாக எடுத்துச்சென்று அடிபட்ட ரவுடி
சென்னை: இருசக்கர வாகனத்தில் சாவகாசமாக எடுத்துச் செல்லப்பட்ட நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்துச் சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்றிரவு மாங்காட்டை அடுத்துள்ள பரணிபுதூர் நான்கு சாலை சந்திப்பில் ஒரே பைக்கில் 3 பேர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபர் பையில் வைத்திருந்த ஒரு பொருள் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

பலத்த சத்தத்துடன் பொருள் வெடித்ததை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். என்ன நடந்தது என்று அறிய சம்பவ இடத்துக்கு அவர்கள் வருவதற்குள் மூன்று பேரும் வேகமாக தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த மாங்காடு போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெடித்துச் சிதறியது நாட்டு வெடிகுண்டு என்பது தெரியவந்தது. இதற்கிடையே சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரத்தில் ஒரு நபர் பலத்த காயங்களோடு கிடப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே அங்கு சென்று போலீசார் விசாரித்தபோது காயமடைந்தது ஐயப்பந்தாங்கலை சேர்ந்த வினோத்குமார் (27) என்பது தெரியவந்தது. வினோத்குமார் மீது போரூர் மற்றும் மாங்காடு காவல்நிலையங்கள் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், வினோத்குமார் பேப்பர் பை ஒன்றில் நாட்டுவெடிகுண்டை எடுத்துக் கொண்டு நண்பர்களோடு பைக்கில் சென்றதாகவும், அப்போது அது கீழே விழுந்து வெடித்து காயம் அடைந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய வினோத்குமாரின் நண்பர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications