எஸ்.வி.சேகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! உதயநிதி, இன்பநிதி பெயரிலும் மெயில்?
சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததை அடுத்து அவரது வீட்டில் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனை செய்து அது போன்று வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என கண்டறிந்தனர். ஒரே மாதிரியான இமெயில் வந்ததால் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: 2, 3 நாட்களுக்கு முன்னாடி எங்கள் வீட்டில் குண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்தில் இமெயில் வந்ததாக கூறி வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தியிருந்தனர்.

சோதனை செய்ததில் வெடிகுண்டு வைத்ததாக சொல்லப்பட்டது வதந்தி என தெரியவந்தது. எனக்கு 20ஆம் தேதியும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இரு மெயில்களும் 21 ஆம் தேதியும் ஒரு மெயில் வந்துள்ளன. எல்லா மெயில்களும் ஒரே மாதிரி இருக்கிறது.
அந்த மெயிலில். "எங்களை தேடி பிடிப்பது சாத்தியமே இல்லை. நாங்கள் இங்கும் அங்கும் இருக்கிறோம். மனசாட்சியாக இருக்கிறோம். பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்கும் மோதல் செய்வதுதான் நோக்கம்.
ஆனால் இன்று பிரச்சினை தமிழகத்தில் நரேந்திர மோடியும் அண்ணாமலையும் வில்லன்களாக காட்சிப்படுத்தப்படுகிறார்கள். சங்கராச்சாரியார் விஜேயந்திரர் புறக்கணிக்கப்படுகிறார். சி.பி. ராதாகிருஷ்ணன் ஆன்டி திராவிடன் என சொல்லப்படுகிறார்.
ஆனால் எஸ்.வி.சேகர் மட்டும் பச்சோந்தி போல திமுக கோட்டைக்குள் நுழைந்துவிட்டார். மோடி, அண்ணாமலையை பழிச்சொல்லியும் சங்கராச்சியார் விஜயேந்திரரை ஒரு போதும் விமர்சிக்காமலும் இன்று அவர் நல்லவர் போல் நடித்து வேஷம் போடுகிறார்" எனவே இதை யார் அனுப்பியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. காவல் துறையினர் கண்டுபிடிப்பார்கள்.
உதயநிதி, இன்பநிதி பெயரால் மிரட்டல் வருகிறது. நிறைய போலி மெயில் ஐடியை உருவாக்கி மிரட்டி வருகிறார்கள். நான் பாஜகவிலிருந்து வந்த பிறகுதான் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. நான் எனது நண்பர் ஸ்டாலினுக்கு பிரச்சாரம் செய்ய தயார் என சொல்லியிருக்கிறேன்.
தவறான அரசியல்வாதிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது எனது நோக்கம். அவர் மட்டுமே உலகத்தில் ஊழல் அற்றவர் மாதிரியும் திமுகவின் ஊழலை தோலுரித்து காட்டுவதை போல் பேசுகிறார். ஒரு காலத்தில் தேர்தலுக்கு எந்த கட்சி அதிக நிதி வாங்குகிறதோ அந்த கட்சி ஊழல் கட்சி என்றார்கள்.
ஆனால் தற்போது electoral bond என்ற பெயரில் பணம் வாங்குகிறார்கள். இதில் அதிக நிதி வாங்கியுள்ளது பாஜகதான். எதற்காக தொழிலதிபர்கள் நன்கொடை கொடுக்கிறார்கள். அவர்களது ஊழலை மறைக்க தவறை மறைக்கத்தானே!
பாஜக ஊழலற்ற கட்சி என தமிழகத்தில் அண்ணாமலையை வைத்துக் கொண்டு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. நான் நேர்மையாக இருக்கிறேன். எம்எல்ஏவாக இருந்த போதும் கூட நான் யாரிடமும் 10 பைசா வாங்கியது இல்லை. என் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறேன். ஒரு நாள் இல்லாட்டி இன்னொரு நாள் இந்த இமெயில் அனுப்பியவர்கள் பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்காக ஆறுதல் சொன்ன ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications