அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ந்து போன போலீசார்.. பரபரத்த சென்னை
சென்னை: திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
அண்மைக் காலமாக முதல்வர் ஸ்டாலின்,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனின் வீட்டுக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போயஸ் கார்டனில் உள்ள அவரது வாடகை வீட்டில் விடிய விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
நேற்று காலை இ-மெயில் மூலம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் வந்துது. இதனையடுத்து விழுப்புரத்தில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் தைலாபுரம் வீட்டிற்கு விரைந்து சென்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.
இதேபோல, சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அன்புமணி ராமதாஸ் வீடுகளில் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் புரளி என்பது தெரியவந்தது.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications