சென்னை சோழிங்கநல்லூர் எல்காட் வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவன அலுவலகங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இது பின்னர் புரளி எனத் தெரிய வந்தது.
சென்னை சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் பிரதான சாலையில் எல்காட் சிறப்பு மென்பொருள் பொருளாதார வளாகம் உள்ளது. இங்கு பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில் இந்த வளாகத்தில் உள்ள அலுவலகங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக ஒரு இமெயில் வந்துள்ளது. அந்த மெயிலில் எல்காட் வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாக வெடிக்கும் என்றும் முடிந்தால் அனைவரும் தப்பித்துவிடுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.
சென்னை.. பிரபல சாப்ட்வேர் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் #chennai pic.twitter.com/zkag1sAsYP
— Oneindia Tamil (@thatsTamil) January 30, 2019
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செம்மஞ்சேரி போலீசாரை உஷார்படுத்தி வெடிகுண்டு நிபுணர்களை சம்பவ இடத்திற்கு வரவைத்து மூன்று மணி நேரம் சோதனையிட்டனர்.
சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு ஏதும் இல்லை. இது புரளி என உறுதிபடுத்தியதை அடுத்து செம்மஞ்சேரி போலீசார் மெயில் அனுப்பிய நபர் யார் என்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.