நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர சோதனை.. என்ன நடக்கிறது?
சென்னை: சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு மர்ம நபர் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய சோதனையில் அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக, முன்னணி பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. உடனடியாகக் காவல்துறையினர் விசாரணையில் களம் இறங்கிச் சம்பந்தப்பட்ட நபரை விசாரித்து கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். சிலரை எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறார்கள்.
இந்நிலையில் இன்று மாலை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நடிகர் அஜித் வீடு மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் சில நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாகத் தகவல் தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.
உடனே காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நடிகர் அஜித் வசிக்கும் திருவான்மியூர் காவல் நிலையத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்பாகக் கிழக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று அஜித் வீடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிரமாகச் சோதனை நடத்தினர்.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்துத் தேடியபோது வழக்கமாக மிரட்டல் விடுக்கக்கூடிய மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
புவனேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே முன்னாள் முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரது பிரபலமானவர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கியவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.