தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைப்போம் - மிரட்டல் விடுத்த பாஜக கர்னல் பாண்டியன் மீது பாய்ந்தது வழக்கு!
வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கர்னல் பாண்டியன் மீது வழக்கு பாய்ந்தது.
சென்னை: தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பாபு, தகராறு ஒன்றில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திமுக கவுன்சிலர் ஒருவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகராறு ஒன்றில் ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் பாஜக சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கர்னல் பாண்டியன், இராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள்; வெடிகுண்டு வைக்க தெரிந்தவர்கள்; இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் வெடிகுண்டு வைப்போம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கும் கெட்டுவிடும். இதனை பகிரங்கமாக தெரிவிக்கிறோம் என்றார்.
பாஜக கர்னல் பாண்டியனின் இந்த் பேச்சுக்கு செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதும், ஆமாம் நாங்கள் குண்டு வைப்போம். மிரட்டதான் விடுக்கிறோம். சட்டம் ஒழுங்கு கெட்டுத்தான் போகும் என மீண்டு கர்னல் பாண்டியன் ஆவேசமாக கூறினார். கர்னல் பாண்டியன் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வன்முறையை தூண்டும் வகையில் பயங்கரவாத செயலில் ஈடுபடுவோம் என்கிற வகையில் வெடிகுண்டு வைப்போம் என பேசிய கர்னல் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழகத்தை வன்முறைக் களமாக்க, சமூக அமைதியைக் கெடுக்க,தொழில் முதலீடுகளைத் தடுக்க நண்பர் அண்ணாமலை செய்யும் மக்கள் விரோத அரசியலின் ஒரு கருவிதான் இந்த முன்னாள்ராணுவ நபர். முள்மரத்தை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். தேசப்பதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் வெடிகுண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த பாஜக கர்னல் பாண்டியன் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து கர்னல் பாண்டியனை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்யக் கூடும் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications