ஆகாசா ஏர் விமானம் வெடித்துச் சிதறும்.. மர்ம நபரின் மிரட்டலால் சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆகாசா நிறுவனத்தின் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆகாசா விமான போக்குவரத்து சேவையைத் தொடங்கினார். தொடங்கப்பட்டதில் இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்த ஆகாசா ஏர் விமான சேவை கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் இருந்து வருகிறது.

நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு நிர்வாக காரணங்களால் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தியது ஆகாசா ஏர். இதையடுத்து, ஆகாசா நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள், பன்னாட்டு விமான நிலையங்களின் ஹேங்கர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஒரு விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எக்ஸ் (ட்விட்டர்) சமூகவலைதளத்தில் ஆகாசா விமான நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்ட மர்ம நபர் ஒருவர், ஆகாசா விமானம் வெடித்து சிதறும் என மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக உடனடியாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆகாசா ஏர் விமானத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
ஆகாசா ஏர் விமானத்தையும், விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியோடு சோதனை செய்தனர். இந்த ஆய்வில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால் விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த வெடிகுண்டு மிரட்டலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications