3 திமுக அமைச்சர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! டெல்லி சம்பவத்தை தொடர்ந்து பரபரத்த தமிழ்நாடு
சென்னை: 3 அமைச்சர்களின் வீடுகளுக்கு இ-மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஒரே நாளில் திமுக அமைச்சர்களான சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய 3 பேர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், மத வழிபாட்டு தலங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மிரட்டல்களைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீட்டில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சியில் உள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரண்டு அமைச்சர்கள் வீட்டிற்கும் விரைந்து சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கும் தீவிரச் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
ஒரே நாளில் திமுக அமைச்சர்களான சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய 3 பேர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் முன்பு திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்த கோரச் சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். இது தொடர்பாக 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 3 அமைச்சர்களின் வீடுகளுக்கு இன்று அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications